சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 21st, 2024


சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கிராமிய மகா சம்மேளன பிரதிநிதிகளுடன் இன்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகள், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளினால் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்படுவதாகவும் குறிப்பாக கொக்குளாய்  பிரதேசத்தில் கட்டுப்பாடற்ற வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத தொழில்களினால்,  முல்லைத்தீவு பிரதேச கடல் வளத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: