கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் – தம்பிலுவில் மக்கள் சுட்டிக்காட்டு!

Thursday, January 4th, 2018

எமது சமூகத்தின் பின்னடைவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பவர்கள் நாம் தெரிவுசெய்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளே என அம்பாறை தம்பிலுவல் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அம்பாறை தம்பிலுவல் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி எமது வாக்குகளால் வெற்றியைத் தமதாக்கிக்கொண்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள்  எம்மை ஏமாற்றி நட்டாற்றில் விட்டுள்ளனர். அந்தவகையில் எமது வீழ்ச்சிக்கும் பின்னடைவுகளுக்கும் நாமே காரணமாகிவிட்டோம்.

ஏனென்றால் நாம் அவர்களை தெரிவுசெய்து  நாடாளுமன்றம் அனுப்பியிருந்தபோதிலும் அவர்களால் கடந்தகாலங்களிலோ அன்றி நிகழ்காலத்திலோ எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை. இந்நிலையில் தங்களது அம்பாறை மாவட்டத்துக்கான  விஜயமும்  உள்ளூராட்சி மன்ற தேர்லில் பங்கெடுப்பதுமான இன்றைய சூழ்நிலை எமக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

இந்த நிலையில்தான் நாம் பழைய அரசியல் தலைமைகளை வெறுப்பதுடன் புதிய மாற்றத்தையும் விரும்புகின்றோம்.

புதியமாற்றம் ஒன்றின் தேவைக்கான நிலைப்பாட்டை உணர்ந்துகொண்டவர்களாக நாம் முழுமையாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்து அதன் வெற்றியை உறுதிசெய்ய திடசங்கற்பம்  பூண்டுள்ளோம்.

இனிமேலும் எந்தப் பொய்யான வாக்குறுதிகளையும் நம்பி நாம் ஏமாறுவதற்கு தயாரில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர்கள் நாம் கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து  மாற்றம் காண்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி என்பது அவசியமானது என்றும் மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பகுதி மக்களது பிரச்சனைகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் உரிய தீர்வுகள் பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்ததுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் உரிய தீர்வுகள் காணப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா உறுதிகூறியுள்ளார்.

Related posts: