கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 19th, 2019

இலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு கொடுக்காது தமது சுய தேவைகளுக்காக தரகு அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ் அரசியல் தரப்பினரால் தமிழ் மக்களுக்கான தேவைப்பாடுகள் மட்டுமல்லாது அவர்களது அரசியல் உரிமைகளும் தடுக்கப்பட்டு வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒருதொகுதி தீவக வலயக் கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் தேசிய கூட்டமைப்பினரது தரகு அரசியல் போக்கு இன்று தமிழ் மக்களை நடு வீதியில் விட்டுள்ளதை தவிர வேறெதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நிலைமையால் சாதாரண ஒரு பொதுமகன் தனது அடிப்படை தேவைகளை பெற்றுக் கொள்வதற்குக் கூட இன்று வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது அரச உத்தியோகத்தர்களும் அரசியல் ரீதியாகவோ அன்றி தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காகவோ பழிவாங்கப்படும் அவல நிலையும் உருவாகியுள்ளது.

தீவக வலய கல்வி அதிகாரிகள் பழிவாங்கப்படுவதை குறிப்பாக ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்ட பிரச்சினை நடைபெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நூறு நாள்கள் கடந்திருந்த நிலையிலும் அதற்கான நிரந்தர தீர்வு இன்னமும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

ஆனால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு இலகுவாக ஓர் இரவில் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனாலும் இன்று தமிழ் தரப்பினரது தரகு அரசியல் போக்கால் நிலைமை அவ்வாறானதாக காணப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளை நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்த போது மிகச் சாதாரணமான முறையில் ஒரு சில மணித்தியாலங்களில் தீர்வுகளை கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் ஆணையை அபகரித்து அதிகார தரப்பினருடன் கரம் கோர்த்து ஆட்சி செய்ய முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுக்க துளியளவேனும் சிந்திப்பதாக தெரியவில்லை. இதை இன்று தமிழ் மக்களும் உணர்ந்துள்ளனர்.

அந்தவகையில் எமது மக்கள் தமது எதிர்காலத்தை வெற்றிகொள்ள இனிவருங்காலத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியானதாக பயண்படுத்திக் கொள்ள வேண்டும். இதை தமிழ் மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அவ்வாறான ஒரு நிலைமையை மக்கள் தருவார்களேயானால் அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் அபிவிருத்தியுடன் அரசியல் உள்ளிட்ட அனைத்து அபிலாஷைகளையும் பெற்றுக்கொடுத்து நிலையான வாழ்வியல் சூழலை உருவாக்கிக் கொடுக்க எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!