குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 30th, 2016

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விஷேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான உதவித் திட்டங்களின் மூலமாக தங்களுக்குரிய பல்வேறு தீர்வுகளைப் பெற இயலாத நிலையிலேயே குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வருகின்ற நிறுவனங்கள் கொடுத்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதில்  அக்கறை காட்டுகின்றன. எனினும் இப் பெண்கள் அந் நிதியைக் கொண்டு தங்களது வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சமூகப் பொறுப்பாக நினைத்து வழங்க இந் நிறுவனங்கள் முன்வராததால் நிதியைப் பெறும் பெண்கள் அவற்றை மீளச் செலுத்த இயலாமல் கடனாளிகளாக மாறும் நிலைமைகள் தொடருகின்றன.

அத்துடன் இப் பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு இப் பெண்களுக்கான விஷேட நிவாரணங்கள் உதவித் தொகைகள் உதவித் திட்டங்கள் உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் ஆலோசனைகள் என்பன அனைத்தும் அடங்கும் வகையிலான ஒரு விஷேட செயற்திட்டம் அவசியமாகவும் அவசரமாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்க...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பு - கடற்றொழிலா...