கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Tuesday, August 10th, 2021கிடைத்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டதன் விளைவு குடிநீருக்கே கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என்று ஆதங்கத்தினை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீண்டும் மீண்டும் தான் சொல்லும் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளாது தவறானவர்களை தெரிவுசெய்வதனால், இன்று தண்ணீர் மட்டுமல்ல எமது வாழ்வதாரமே மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பூநகரி பனை, தென்னை வள அபிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு இன்று(10.08.2021) விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கூட்டுறவுச் சங்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது, இயங்காமல் கைவிடப்பட்டுள்ள சுமார் 5 கிளைகளை இயங்கச் செய்தல், வெல்லம் பனங்களி போன்ற உற்பத்திகளை போத்தலில் அடைப்பதற்கான இயந்திரம், கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தினை பூரணப்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் பூநகரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், சங்கக் கட்டிடத்தினை முழுமைப்படுத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்பதால், கட்டிடம் முழுமையடையாமையினால் ஏற்படும் பாதிப்புக்களை நிறுத்தும் வகையில் தற்காலிக ஏற்பாட்டுத் திட்டம் ஒன்றினை தயார்ப்படுத்துமாறும் தெரிவித்தார்.
அத்துடன், “கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு மேலதிகமான நீரை பூநகரி, பளைப் பிரதேசங்களுக்கான குடிநீராக பயன்படுத்தும் திட்டத்தினை அரசியல் நோக்கத்திற்காக உதறித்தள்ளி விட்டு அல்லது உதறித் தள்ளியவர்களை பலப்படுத்திவிட்டு, இப்போது குடிநீரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
இவ்வாறான தவறான அணுகுமுறைகளின் தொடர்ச்சியே யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களை கடந்த நிலையிலும், எமது வாழ்வாதாரத்திற்காக ஏனையோரின் கைகளை எதிர்பார்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது” என்று தெரிவித்தார்.
மேலும், உற்பத்திகளை போத்தலில் அடைப்பதற்கான இயந்திரத்தினை பெற்றுக்கொள்ளல், உற்பத்திகளுக்கான வரி அறவீட்டினை இலகுபடுத்தல், குடிநீர் தாங்கி மற்றும் உழவு இயந்திரம் ஒன்றினை ஏற்பாடு செய்தல் போன்ற கூடடுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கான தேவைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது சுமார் எட்டிற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ள பூநகரி பனை தென்னை வள ஆபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக சுமார் 225 தொழில் வல்லுநர்கள் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|