காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Friday, September 17th, 2021

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றபோது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒப்புதல் இன்றி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவையும் இடம்பெறக் கூடாது என்றும் அமைச்சரினால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தார் தலைமையில் நேற்று(16.09.2021) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே, மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பிரமனந்தனாறு பிரதேசத்தில் எதுவித அறிவித்தலும் இன்றி, வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் காணிகள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பிரதேச செயலாளரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்ற செயற்பாடு கரைச்சிப் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைமடுப் பகுதியிலும் இடம்பெறுவதாவும் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டபபட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய சுற்றிக்கையின் பிரகாரம், வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரால் காணிகள் புதிதாக அடையாளப்படுத்தப்படுகின்ற போது பிரதேச செயலாளர்களின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுதுடன், பிரதேச செயலாளர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் வரையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிக்கு தெரிவித்தார்.

அதேபோன்று, அமைச்சரவையின் புதிய தீர்மானத்திற்கு அமைய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கட்டுபாட்டில் இருக்கின்ற காணிகள் தொடர்பான செயற்பாடுகள் அனைத்தும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒப்புதலுடனேயே இடம்பெற வேண்டும் என்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதன்போது, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சுமார் 325 பயனாளிகள் இருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் பிரதேச மக்களினால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற சுமார் 300 ஏக்கர் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் கோரியுள்ள போதிலும், இதுவரையில் 40 ஏக்கர் காணிகள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக கரைச்சிப் பிரதேச செயலாளரினால்  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனப் பாதுகாப்பு அதிகாரி, பிரதேச செயலாளரின் கோரிக்கை தமது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், கூடிய விரைவில் பொருத்தமான காணிகளை பிரதேச செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்றைய கூட்டத்தின்போது, கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருததிக் கூட்டுறவுச் சங்கத்தின் போத்தலில் அடைக்கப்பட்ட உற்பத்திகளை தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள், கரும்புத் தோட்டக் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்குதல் மற்றும் கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை ஒழுங்குபடுத்தல், இலங்கை போக்குவரத்துச் சபை அமைந்துள்ள பிரதேசத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கல் போன்ற பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டு ஆக்க்பூர்வமான தீர்மானங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: