இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Monday, March 18th, 2024இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவரது அழைப்பு சில தினங்களுக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்பதாக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு பாண்டிச்சேரி கடற்றொழில் மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
எனினும் தமிழக அரசின் உத்தியோக பூர்வமான அழைப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றமை தொடர்பில் ஆழமான கரிசனைகளைக் செலுத்தி இந்த விவகாரத்துக்கு தீர்வொன்றைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி பாண்டிச்சேரி அமைச்சர் லக்ஷ்மி நாராணயன் எனக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் இந்தவிடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு அவசரமாக எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசின் தரப்பினரும் என்னுடன் முதல்வருடனான சந்திப்பு தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
ஆனாலும் தமிழக முதல்வரின் உத்தியோக பூர்வமான அழைப்பு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்காக நான் காத்திருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது, இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதையும், இழுவை மடிப்படகுகள் பயன்பாட்டை முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாகவே எடுத்துக் கூறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|