காகம் திட்டி மாடு சாகாது! மாடு முட்டி விருட்சம் வீழாது!! –  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, October 25th, 2016

நாம் சொல்லும் கருத்துக்கள் எமது மக்களின் தேசிய அபிலாசைகளின் குரலாகவே என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். அதற்காகவே நாம் தேர்ந்தெடுத்திருக்கும் எமது யதார்த்த அரசியல் வழிமுறைப் பயணமும் தமிழ் தேசிய இனத்தின் இலக்கை அடைந்தே தீரும் என்பது உறுதி என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது மக்களின் தாயக விடியலுக்காக, சுயநிர்ணய உரிமைக்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். இரத்தமும் தசையும் உரிமைப்போருக்கு உரமாக கொடுத்து மாபெரும் அர்ப்பணங்கள் ஆற்றியவர்கள் நாம். எமது மக்களின் விடிவிற்காக ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்திச்சென்ற தியாக வரலாறு எமக்குண்டு.

ஆனாலும் நாம் தோற்றுப்போன ஒரு இனமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் எமது பாதையை நாம் தொலை தூரப்பார்வையில் மாற்றிக்கொண்டவர்கள். அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் அதற்கான பாதைகளும் உருவெடுக்கின்றன. எமது யதார்த்த அரசியல் வழிமுறைப்பயணமும் அப்படித்தான்.

பாதை மாறினாலும் எம் பயணம் நின்றதில்லை. காலம் எமக்கு இட்ட கட்டைளையை ஏற்று தீர்வின் திசை நோக்கி நாம் உறுதியுடன் நடகின்றோம். தீராப்பிரச்சினையாக நீடித்துசெல்லும் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்காக,….

எமது மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி, சமூக முன்னேற்றம் மற்றும் வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக, நாம் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் உறுதியுடன் உழைத்து வருகின்றோம். எமது வழிமுறையில் நின்று எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவு வெற்றிகளை எமது மக்களுக்கு நாம் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்.

எமது வழிமுறைக்கே இன்று எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் வழி முறைக்கு வந்தவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறி முறைக்கு வர இன்னும் விரும்பவில்லை. அந்த ஆற்றலையும் அவர்கள் துளியளவும் கொண்டிருக்கவில்லை. அரசியல் பலத்தோடு இருந்தும் எதையும் சாதிக்க விரும்பாதவர்களின் எடுபிடிகளே போதிய அரசியல் பலமின்றியும் முடிந்தளவு தீர்வு கண்டு வரும் எம்மீது அவதூறுகளை பரப்ப முனைகின்றார்கள்.

அவதூறுகளை எவர் எம்மீது பொழிந்தாலும் வடுக்களை யார்தான் எம்மீது சுமத்தினாலும் எமது மக்களுக்கான எமது உண்மை வழி யதார்த்த அரசியல் பயணம் ஒருபோதும் நின்று விடாது. கால்கள் வலித்தாலும் நம் கடும் பயணம் ஓயாது.

முட்கள் எறிந்து எம் பயணத்தை தடுத்தாலும் மக்கள் சக்தியின் கரங்கள் நீண்டு மலர்கள் தூவி எம் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கும். நாம் மக்கள் என்ற சமுத்திரத்தில் வாழும் மீன்கள். எமது மக்களை விட்டு நாம் நீங்காத வரை எமக்கு ஒரு போதும் அரசியல் சரிவில்லை.

எமது பிரச்சார தளங்களில் வந்து எமக்கு எதிராக அவதூறு பரப்புவோர்கள் தங்களது கடந்த கால மக்கள் விரோத வன்முறை அரசியலுக்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள். அது போலவே, எதையும் சாதிக்க முடியாத தங்களது வரலாற்று தவறுகளை மூடி மறக்கவும் முற்படுகிறார்கள். எமது மக்களின் பேரவலங்களை வைத்து சுயலாப அரசியல் நடத்துவோர்கள் எம்மீது கறை பூசி ஒரு போதும் அதில் வெற்றி காண முடியாது.

காகம் திட்டி மாடு சாகாது! மாடு முட்டி விருட்சம் வீழாது!! எந்தச்சாத்தான்களாலும் எம்மை அசுத்தப்படுத்திவிட முடியாது. உன்னையே நீ அறிவாய்!.. இதுவே உலக மகா தத்துவம். எமது கருத்துக்கள் நித்திரை கொள்பவன் போல் நடிப்பவனை எழுப்புவதற்காக அல்ல.

அரசியல் விழிப்புர்ணவு தமிழ் தேசிய இனத்திற்கே என்றும் தேவை. விழித்தெழுங்கள் என்று நாம் கேட்பது எமது மக்களையே அன்றி.நித்திரை கொள்பவர்கள் போல் நடிப்பவர்களை அல்ல.

அறியாயாமை உள்ளவர்களுக்கு அறிவூட்டவே நாம் விரும்புகிறோம். அதற்காகவே எங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் நாம் மக்கள் முன்பாக கொண்டு செல்கிறோம். எமது யதார்த்த வழிமுறையிலான பாதையில் நாங்கள் உறுதியுடன் பயணிக்கிறோம்… எம்மீதான உண்மையுள்ளவர்களின் விமர்சனங்களை நாம் என்றும் ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

1

Related posts:

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்த...