கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Saturday, December 2nd, 2023


……..
யா/கரவெட்டி கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது

முன்பதாக குறித்த பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்ட நிலையில் திடீரென  இடமாற்றம் வழங்கப்படுள்ளது. இன்னிலையில் இடமாற்றத்தை இடைநிறுத்தி தருமாறு யா/கரவெட்டி கரணவாய் மகாவித்தியாலய கல்விச் சமூகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்த குறித்த பாடசாலை கல்விச் சமூகத்தினர் தமது பாடசாலையின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

இதன்போதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் –

தமது பாடசாலையில் கல்விப் பொது சாதாரண தரம் வரையில் வகுப்புக்கள் உள்ள் நிலையில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகின்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கில பாடத்துக்கென ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

அவரது வருகையின் பின்னர்  பாடசாலையின் ஆங்கில பாட அறிவு மட்டம் முன்னேற்றம் கண்டுவருகின்றது.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் திடீரென இடமாற்றப்படுவதால் இன்னும் சில மாதங்களில் சாதாரணதரப் பரீட்சையும் வரவுள்ள நிலையில் தமது கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஆசிரியரது இடமாற்றத்தை இடை நிறுத்தி தாருங்கள் என அமைச்சரிடம்  கோரியிருந்தனர்.

பாடசாலையின் கல்விச் சமூக கோரிக்கையின் நியாயத்தன்மையை கருத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: