கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 8th, 2023

கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உறுதிப்படுத்தவும் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (08.12.2023) நடைபெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர்,

கடற்றொழில் அமைச்சானது கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், சேமிப்புத் திட்டம் , காப்புறுதித் திட்டம் போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை பொதுவாகவே தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் எனது பெரிய தந்தை மற்றும் மாமா ஆகியோர் பல போராட்டங்களை நடத்தியும், பல தளங்களில் குரல் எழுப்பியும் செயற்பட்டவர்கள்.

குறிப்பாக ஐ.எல்.ஓ அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்புடனும் தொடர்புபட்டு செயற்பட்டவர்கள் என்பதால் தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இயல்பாகவே எனக்கு இருக்கின்றது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் பல நாடுகள் பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதைப்போன்று எமது கடற்றொழிலாளர்கள் தொடர்பாகவும் இணக்கங்களை ஏற்படுத்தும் ஒழுங்கு விதிகளுக்கான வரைபு ஒன்றை தயாரித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முன்பதாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிமுறைகளை கருத்தில் கொண்டு கடற்றொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் வரைபு தொடர்பில் அமைச்சின் சட்ட அலுவலர் சாலிகா அவர்கள் தெளிவூட்டல் செய்திருந்தார்.

இதன்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள், அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: