கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016

எமது பகுதியில் இறங்குதுறைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. கடற்றொழிலாளர்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்பட வேண்டிய நிலைகள் காணப்படுகின்றன. தற்போது, கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வடக்கு மாகாணத்திலும் முன்னுரிமை அடிப்டையில் அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம்(06) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதே நேரம், கடல் உயிரினப் பெருக்கம் கருதி எமது கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாத 45 நாள் காலகட்டத்தின்போது அவர்களுக்கென ஒரு நிவாரணத் திட்டம் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் விவசாய பீடங்கள் செயற்படுவதைப் போன்று, கடற்றொழில் சார்ந்த கற்கை நெறிக்கென பல்கலைக்கழக மட்டத்தில் தனியான பீடங்களை அமைக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் கடல் உற்பத்தி வளப் பகுதிகளில் ரின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகள் – பாரியளவில் இல்லை எனினும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களாக அமைக்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில், கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் இந்த அமைச்சைத் திறம்பட நடத்துவதற்குத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் வடக்கு – கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கும் சென்று கடற்றொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார். அந்த வகையில் அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

06

Related posts: