இம்பசிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
Wednesday, January 2nd, 2019பருத்தித்துறை இம்பசிட்டி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடல் வான் அகழ்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான பொருளாதார வசதிகளுடன் ஒர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற கொள்கையுடனேயே நாம் உழைத்துவருகின்றோம்.
அந்தவகையிலேயே கடந்த காலத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது இப்பகுதியில் மட்டுமல்லாது குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து மக்களது தேவைப்பாடுகளை நிறைவு செய்திருந்தோம்.
எமது இனத்திற்கான அபிலாஷைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் எமது மக்களை தலைமை வகித்த கடந்தகால தமிழ் தலைமைகளின் தவறுகளால் அனைத்தும் கானல் நீராகிவிட்டன. இதன் விளைவுகளே இன்றைய தமிழ் மக்களின் அவலங்களுக்கான காரணமாக இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானாலும் சரி அபிவிருத்திக்கான தீர்வானாலும் சரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை இன்று அனைவரும் உணர்ந்துள்ளனர்.
தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எம்மால் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. ஆனாலும் அதற்கான அரசியல் அதிகாரங்கள் இதுவரை எமக்கு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.
எனவே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வியல் நிலை தொடர்பில் சிந்தித்து விளிப்படையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்பதுடன் இந்த இம்பசிட்டி பகுதி கடற்றொழிலாளர்களது வான் அகழ்வு பிரச்சினைக்கும் நிச்சயமாக தீர்வை பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் மற்றும் கட்சியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சாந்தாதேவி உள்ளிட்ட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|