வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019

இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர, வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இது குறித்து தமிழர் ஆசியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த ஓர் அறிக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும், அவர்களை விசாரிக்கவோ, அன்றி தண்டனை வழங்கவோ முடியாத அளவுக்கு வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கள் அவர்களைப் பாதுகாப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாறாக அதிபர்கள், ஆசிரியர்கள் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்தததும் அதற்கான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, விசாரணை செய்யும் அதிகாரிகள் பல இலட்சம் ரூபாக்களைச் சம்பாதித்து, முறையான தீர்ப்புகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் செய்கின்ற குற்றச் செயல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் பற்றி கல்வி அமைச்சிடம் முறைப்பாடுகள் செய்தால் முறைப்பாடு செய்தவருக்குப் பதிலேதும் அனுப்பாமலும், முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யாமல் இருப்பதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சுகளுக்கு சர்வ சாதாரணமான விடயமாகிவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் கல்வி அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்த தரப்பினராகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றே தெரிய வருகின்றது. (குருகுலராஜா, சர்வேஸ்வரன், தண்டாயுதபாணி)

இந்தக் கூட்டமைப்பினர் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று, எமது மக்களுக்கு எதுவுமே செய்யாதிருப்பதுடன், இவ்வாறு எமது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்ற கல்விக்கும்கூட எந்தளவிற்குத் தடையாக இருந்து வருகின்றனர் என்பதையே இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...