ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019

இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை – நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக வசதிகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கள் போன்றவற்றை முதன்மைப்படுத்தியதாக நிறைவேற்றாளரினதும், சட்டவாக்கத் துறையினதும் – நாடாளுமன்றத்தினதும்  அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் என்ற வகையில் பரவலாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பார்க்கின்றபோது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள், மாகாண சபைகளில் 455 உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளில் 7654 உறுப்பினர்கள் என மொத்தமாக 8314 மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது, சுமார் 2452 மக்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மக்கள் பிரதிநிதிகளுக்குரிய ஊதியங்கள், வீட்டு வசதிகள், வாகனங்கள், வாகனச் செலவுகள், ஏனைய சலுகைகள் எனப் பார்க்கின்றபோது, அந்த அனைத்து வசதிகளும் இந்த நாட்டு மக்களின் மீதே பெரும் சுமையாகச் சுமத்தப்பட்டு வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 நிறுவனங்கள் தொடர்பிலான 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தங்களது பதவிகளுக்கான செலவீனச் சுமைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் தாங்குகின்ற மக்களுக்கு இந்த மக்கள் பிரதிநிதிகளால் ஏதேனும் சேவைகள் நடக்கின்றனவா? என்பது தென் பகுதியைப் பொறுத்து போதுமானளவு நடப்பதாகவே தெரிய வந்தாலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பூச்சியமாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் – இத்தனை மக்கள் பிரதிநிதிகள் இருந்தும், இந்த நாட்டின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக எனக் கூறப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதாவது, சுயாதீனமான நிர்வாகச் சேவைகளை முன்னெடுப்பதற்கு என்ற நோக்கத்திற்காக எனக் கூறப்பட்டு இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா? என்ற கேள்வி இன்று எமது மக்கள் முன் எழுந்துள்ளது.

இந்த ஆணைக்குழுக்களை உருவாக்குகின்ற முழுமையான அதிகார மையமாக செயற்படுவது அரசியலமைப்புச் சபையாகும். இதில் பொது மக்களது பிரதிநிதித்துவத்திற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்ற போதிலும், அரசியல் மயமற்றதான நோக்கத்தை முக்கியமாகக் கொண்டிருக்கவேண்டிய இந்தச் சபையில் அதிகமான உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களே கொண்டுள்ள நிலையில் – அதுவும் ஆளுங்கட்சி உறுப்பினர்களையே கொண்டிருக்கின்றது. ஆளுங்கட்சியுடன் செயற்பட்டு வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது. அரசியலமைப்புச் சபையில் உறுப்புரிமை பெறுகின்ற நிலையில், அந்த உறுப்புரிமையானது எதிர்க்கட்சி உறுப்புரிமையாகிவிடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்க்கட்சி என்ற போர்வையில் இருக்கின்ற ஆளுங்கட்சியினரே என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.

இந்த நிலையில் – இந்த ஆணைக்குழுக்களின் – நிறுவனங்களின் மூலமாக சுயாதீனத் தன்மையை எதிர்பார்க்க முடியுமா? என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.

அதாவது, 8314 மக்கள் பிரதிநிதிகளாகிய அரசியல்வாதிகளால் எதிர்பார்க்கப்பட இயலாத சுயாதீனமான நிர்வாகச் சேவையினை எதிர்பார்த்தே இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான ஆணையாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களை அதே அரசியல் பிரதிநிதிகளே பரிந்துரைத்து நியமிக்கப்பட வேண்டும் எனில், இந்த ஆணைக்குழுக்கள் எதற்கு? இது இந்த நாட்டு மக்களுக்கு மேலுமொரு வீண் செலவாக இல்லையா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

இந்த அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் இதே நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகவே தெரிவித்திருந்தார். அவரது கடுமையான விமர்சனத்திற்கு இந்த அரசியலமைப்புச் சபை ஆளாகியிருந்தது. நாட்டின் தலைவரின் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள ஒரு சபையினால் நியமனங்களுக்கான பரிந்துரைகளைப் பெறுகின்றவர்களைக் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை தொடர்பில் இந்த நாட்டு மக்கள் சிந்தித்திப் பார்க்க மாட்டார்களா? என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகின்றது.

அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுகள் இல்லை. சுயாதீன ஆணைக்குழுக்கள் தமக்காக உருவாக்கப்பட்டவையா? என்ற உணர்வுகள் நாட்டு மக்களிடையே இல்லை. இந்த ஆணைக்குழுக்களுக்கு – நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுகப்படுகின்ற அதிகாரிகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற தெளிவு மக்களுக்கு இல்லை.

குறிப்பாக இந்த ஆணைக்குழுக்கள் தமது செயற்பாட்டு ஒழுங்குவிதிகள் தொடர்பில் உரிய சட்ட கட்டமைப்பிற்குள் தமது அதிகார ஆணையை மிகவும் விரிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். பரந்தளவிலான மக்கள் அபிப்பிராயக் கோரலின் பின்னர் வகுக்கப்பட்ட தந்திரோபாய திட்டங்கள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். அதேநேரம், அதனது உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ள எண்ணக் கரு குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் நடக்கின்றனவா? என்பது கேள்விக்குள் மட்டுமே அடக்கப்பட்டு விடுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை மட்டுமல்ல தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது – நாடாளுமன்றில்...
வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக...

கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக...