அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

பொது நிர்வாக அமைச்சு தொடர்பில் கதைக்கின்றோம். இன்னமும் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் என்ற விடயத்தில் நீங்கள் எந்தளவுக்கு முன்னேறியிருக்கின்றீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்த நாட்டில் தமிழ் மொழி மூலமான பரிச்சயத்தை மாத்திரமே கொண்டுள்ள எமது மக்களுக்கு, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரச சேவைகளின்போது சிரமங்கள் தோன்றுகின்ற போது, இதனை எமது மக்கள் பொது நிர்வாகம் என எப்படி இனங்காண்பார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.
ஆக, மொழி ரீதியாக பொது நிர்வாகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்படுகின்ற எமது மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் என்பது எந்த மொழியில் ஏற்படப் போகின்றது? எனக் கேட்க விரும்புகின்றேன்.
இவ்வாறு எதிலும் பாகுபாடுகள் தொடருமானால், பிறகெதற்கு இந்த தேசிய நல்லிணக்க முயற்சிகள்? என்றே எமது மக்கள் கேட்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|