அபிவிருத்தியை சலுகை என்றுஎதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019

அன்று அபிவிருத்தியை வெறும் சலுகை என்று கூறியவர்கள் இன்று தாமாகவே குனிந்து நின்று அத்திவாரங்களுக்கு அடிக்கற்கள் நாட்டுகின்றார்கள். வேடிக்கை என்னவென்றால், வீதிகள் புனரமைப்பது எங்கள் விடுதலையாகாது என்று கூச்சலிட்டவர்கள், தமது தொண்டர்களை அனுப்பி புனரமைப்பதற்காக வீதிகளை அளந்து கொண்டிருக்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சிங்கள அரசுகள் தமிழர்களை பிரித்தாண்டு கூறு போட்டவர்கள் என்று சீறி எழுந்தவர்கள், அதே அரச தலைவர்களை அழைத்து சிம்மாசனம் இருத்தி மரியாதையோடு வழியனுப்பி வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அபிவிருத்தியும் உரிமைதான் என்று எழுதப்பட்டிருக்கும் வாக்;கியங்களை இப்போதுதான் இவர்கள் படித்துப்பார்த்தர்களோ தெரியாது. நாங்கள் அதை எப்போதோ படித்துப்பார்த்தவர்கள். அதை விடவும் எமது மக்களின் அவலங்களை மக்களுடன் கூட இருந்தே அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொண்டவர்கள்.

ஆகையால்தான் அரசியலுரிமைக்கான, அபிவிருத்திக்கான, அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என முப்பரிமாண கொள்கை வகுத்து நாம் செயலாற்றி வருகின்றோம்.

அடுத்தவன் செய்தால் துரோகம்! தாம் செய்தால் ராஜதந்திரம்!! என்ற ஏமாற்று நாடகங்கள் எல்லாம் மக்களின் மன அரங்கில் இனி ஒரு போதும் ஏறாது.

இப்போது கூட வடக்கின் அபிவிருத்தியை பிரதமரின் ஊடாக செய்ய எத்தனிக்கும் தரகு அரசியலை நடத்த விரும்புகிறார்களே ஒழிய, தாமாக முன் வந்து தமிழ் பேசும் மக்களின் அவலங்களை நேரில் நின்று தீர்க்கும் திராணியற்றவர்களாகவே இருந்து வருகின்றார்கள். தத்தமது சொந்த சலுகைகளை அரசுடன் பின்கதவால் கைகுலுக்கி பெற்றுக்கொள்கிறார்கள்.

அது போல், தமிழ் பேசும் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளையும் தாமே அமைச்சு பொறுப்பெடுத்து பெற்றுக்கொடுப்பதில் ஏன் தயக்கம் என்று கேட்கின்றேன்.

தமது அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர்களுக்கு கிடைக்கும் அமைச்சு அதிகாரங்களை தடுத்து நிறுத்தும் சுயலாப  அரசியல் தலைமையல்ல நாம். யார் குற்றியும் அரிசியானால் சரி, ஆனாலும் அந்த அரிசி பசித்தவனை சென்றடைய வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் நாம்.

எமது வழிமுறைக்கு மட்டும் வந்தவர்களை நாம் வரவேற்கின்ற அதேவேளை அதைப்போல்; எதை? எப்படி? எவ்வாறு? சாதித்து காட்டுவது என்ற எமது பொறிமுறைக்கும் அவர்கள் வருவார்களேயானால், நாம் அதை திறந்த மனத்தோடு என்றும் வரவேற்போம்.

இன்று நிழல் அமைச்சர்களாக இருக்கும் நீங்கள் நிஜ அமைச்சர்களாக பொறுப்பெடுத்து வந்தால் உங்களுக்கு வழி காட்டவும், வல்லமை தந்து தமிழினத்தின் வாசல் தோறும் வெளிச்சத்தை தர வல்ல ஆலோசனைகையும் வழங்க நான் என்றும் தயாராக இருக்கின்றேன்.

அதேநேரம், தொழிற் பயிற்சி அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூல பயனாளிகள் தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியான வகையில், தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ளவர்கள் அதிகம் வாழுகின்ற பகுதிகளில் தமிழ் மொழி மூல பயிற்சி ஆசியர்களை போதுமானளவு  இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன்.

குறிப்பாக, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் இது தொடர்பில் அதிக அவதானங்களை செலுத்த வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காடடுகின்றேன் என்றார்.

Related posts:

அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா - டக்ளஸ் எம்.ப...
கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பி...