அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் – சம்பூரில் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, January 6th, 2018இந்தப் பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு இங்குவாழும் மக்களே காரணமாக உள்ளீர்கள். ஏனென்றால் கடந்தகாலங்களில் நீங்கள் தவறான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்தமையே இதற்கான காரணமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை சம்பூர் நீலாவேணி பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பெருமளவிலாக திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நான் இந்த பகுதிக்கு வருகின்றபோது இங்குள்ள வீதியின் புனரமைப்பின் அவசியம் குறித்து கரிசனை கொண்டுள்ளேன். நாம் இந்த பிரதேச சபையை வெற்றிகொள்ளும் பட்சத்தில் இந்தப் பாதையின் புனரமைப்பு முதன்மைப்படுத்தப்படும்.
அதுமட்டுமன்றி மின்சாரம், சமுர்த்தி உதவித்திட்டம், காட்டு யானைகளின் அட்டூழியம். கல்வி சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இப்பகுதியின் அபிவிருத்தியை மேம்படுத்துவோம்.
அத்துடன் இந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை மேம்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளோம்.
யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் நிறைவுசெய்துள்ளபோதும் உங்களது வாக்குகளை அபகரித்த அரசியல்வாதிகள் உங்களை ஏமாற்றி தமது சுயநலத்தையும் சுகபோகத்தையுமே அனுபவித்து வருகின்றார்கள். அவர்களை தெரிவுசெய்து நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் எமக்கு வாக்களித்த மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்றப் போவதில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்றிருந்த அதேவேளை தமக்கு நியாயத்தை பெற்றுத்தரக்கூடிய ஒரே தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை எற்றுக்கொள்வதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|