அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, July 26th, 2018
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த வேண்டும். அதேவேளை சட்ட ரீதியான கடற்றொழிலை எவரும் தடுக்க முடியாது. அத்துமீறும் அரசியல் தலையீடுகளே கடற்றொழிலை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு இன்று(26.07.2018) வருகைதந்திருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளனங்களின் (சுருக்குவலைப் பிரிவு) உப தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும், பிறமாவட்டத்து மீனவர்களின் அத்துமீறல்களும் அதிகரித்துள்ளதால், கடற்றொழிலை வாழ்வாதாரமாக நம்பிவாழும் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் எனது கவனத்திற்கு அறியத்தந்துள்ளனர்.
அவ்விடயம் தொடர்பாக காலத்திற்குகாலம் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து,அவற்றைத் தடுத்து நிறுத்த தொடர்ந்தும் போராடி வருகின்றேன். இதற்கிடையே சில உள்ளுர் அரசியல் பிரமுகர்களின் அத்துமீறிய தலையீடுகளாலும், பாரபட்சமான பொறுத்தமற்ற நடவடிக்கைகளாலும் சட்ட ரீதியான அனுமதியளிக்கப்பட்ட கடற்றொழிலில் ஈடுபட்டவர்களும் தமது தொழிலை செய்யமுடியாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது என்று தெரிவித்ததுடன்,மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜேய முனி சொய்சாவுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு சுருக்குவலைத் தொழில் செய்வோர் தொழிலில் ஈடுபடவிடாது தடுக்கப்படுவது தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
அனுமதி பெற்றுள்ள சுருக்குவலைத் தொழிலாளிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் தமது தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மீன்பிடித்துறை அமைச்சர், இவ்விடயத்திற்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்ததையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட சம்மேளன உறுப்பினர்கள்,முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடிப்பாளர்களாலும்,அரசியல் தலையீடுகளாலும், சட்ட ரீதியாக சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறும் செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.


Related posts:
|
|
|


