அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, December 7th, 2016

எமது கடற்றொழிலாளர்களைப் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், மனிதாபிமானமற்றதுமான தொழில் முயற்சிகள் தொடர்பிலேயே அதிக அவதானத்தினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(06) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி இந்தியக் கடற்றொழிலாளர்களது வர்த்தக ரீதியிலான கடற்றொழில் காரணமாக எமது கடற்றொழிலாளர்களுக்கான வாரத்திற்குக் குறைந்தபட்ச மூன்று நாள் தொழிலில்;கூட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நாளாந்த உழைப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையே தொடர்கின்றது.

இந்தியக் கடற்றொழிலாளர்களது வர்த்தக ரீதியிலான பாரியதும், நவீன முறைகளில் அமைந்ததுமான இழுவலைப் படகுகளின் முன்பாக, எமது பாரம்பரிய கடற்றொழில் முயற்சிகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாத நிலையே ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தற்போதைய நிலையில் பாக்கு ஜல சந்தியில் பாரியளவில் கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், அழிவு தரும் விளைவுகளே எமக்கு எஞ்சியிருக்கின்றன.

இந்த வகையில், எமது கடற் பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 600 மெற்றிக் தொன் கடலுணவினை அறுவடை செய்கின்றனர். இவ்வாறு இந்தியத் தொழிலாளர்கள் வருடந்தோறும்  அறுவடை செய்கின்ற சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மெற்றிக் தொன் கடலுணவானது, அவர்களது உள்@ர்த் தேவைகள் போக, எஞ்சியவை வருடந்தோறும் சுமார் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் மேலதிகமாக ‘இந்தியக் கடலுணவு உற்பத்தி’ என்ற பெயரிடப்பட்டு வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், எமது கடற்றொழிலாளர்கள் நாளாந்தம் அறுவடை செய்யும் கடலுணவில் நூற்றுக்கு 15 சத வீதத்திற்கும் குறைவான வர்த்தக ரீதியிலான இறால், நண்டு, கணவாய் போன்ற கடலுணவைப் பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. ஏனைய 85 சத வீதமானவை வர்த்தகப் பெறுமதி அற்றதாகவும், குஞ்சுகளாகவுமே இருப்பதால், அவை உள்@ர் நுகர்வோரின் தேவைக்கும், பெரும்பாலானவை மீண்டும் கடலுக்குள் கொட்டப்படும் நிலையிலுமே இருக்கின்றன.

அதே நேரம், தொழில் வாய்ப்பு மட்டுப்படுத்தப்படுதல், போதிய முதலீட்டு ஊக்குவிப்பு இன்மை, இவற்றால் ஏற்படுகின்ற உற்பத்திக் கொள்ளவு ஆற்றலுக்குக் கீழ் மட்டத்தில் உற்பத்தி அறுவடைகளின் தரம் தள்ளப்பட்டிருப்பமையினால் எமது சிறிய கடற்றொழிலாளர்களது உற்பத்திகளுக்கான கேள்வியானது மறுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. இதனால், எமது நாட்டின் நாளொன்றுக்கான கடலுணவு மூலமான இழப்பு சுமார் 10 – 20 மில்லியன் ரூபாவாக உள்ளது. அதன் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி மொத்த, சில்லறை வியாபாரிகள், பதனிடும் தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள் எனப் பல தரப்பினரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது மட்டுல்ல, இந்தியக் கடற்றொழிலாளர்களது இழுவலைப் படகுகளின் பயன்பாடு காரணமாக கடல் புற் படுக்கை, சேற்று மேடுகள், பவளப் பாறைகள் போன்ற முக்கிய வளங்கள் பாதிக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. அத்துடன், மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போல், சுமார் 30 வருட கால யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டு, தொழில் உட்பட அனைத்து ரீதியிலும் முடக்கப்பட்டிருந்த எமது மக்கள், தங்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தயாராகி வருகின்ற நிலையில், இருக்கின்ற நிதி கொண்டும், கடன் பெற்றும் கொள்வனவு செய்யப்பட்டதும், அரசு உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கியதுமான எமது கடற்றொழிலாளர்களது தொழில் உபகரணங்கள் தொடர்ச்சியாகச் சேதப்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், 2015ம் ஆண்டில் எமது நாடு மீன் உற்பத்தி ஏற்றுமதியானது  2014ம் ஆண்டுடன்  ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது,  32.9 சத வீதத்தால் குறைவடைந்திருந்தது. அந்த வகையில் இந்த கடலுணவு உற்பத்தியானது 2015ம் ஆண்டில் 520,190 மெற்றிக் தொன்னாகக் குறைவடைந்திருந்தமையைக் காணலாம்.

அதே நேரம், குளிரூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியில் எமது அயலக நாடான இந்தியா 10 இலட்சத்து 582 அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாகப் பெற்றுள்ளது.

2014ம் ஆண்டில் நாம் 19,591 மெற்றிக் தொன் டின் மீன்களை இறக்குமதி செய்திருக்கின்றோம். 2015ம் ஆண்டு இது 49,016 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவில் வாழுகின்ற நாம், எமது கடல் அறுவடைகளைப் பறிகொடுத்தும், கடல் வளங்களை அழிவுக்கு உட்படுத்தக் கொடுத்தும், எமது கடல் வளத்தினால் உரிய பயன்களை எட்டாமலும் இருப்பதால் இந்த நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-1 copy

Related posts:

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
இறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது - நாடாளுமன்ற...
கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது ...