கேப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016

முல்லைதீவு, கேப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள்,கேப்பாபுலவு பகுதியில் 520 ஏக்கர் காணி, நிலங்கள் அப் பகுதி மக்களின் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், சூரிபுரம், கேப்பாபுலவு மற்றும் பிலவு குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதிரிக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இம் மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் தொடர்பில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களை தங்களது சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்துமாறு தொடர்ந்து கோரி வரும் இம் மக்கள், உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம் மக்களை அவர்களது சொந்த காணி,  நிலங்களில் குடியமர்த்தினால் இவர்களது வாழ்வாதார நிலைகளில் மாற்றங்களைக் காண முடியுமென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.

அந்த வகையில், தற்போதைய அரசு வலிகாமம் வடக்கு, சாம்பூர் போன்ற பகுதிகளில் எமது மக்களின் காணி, நிலங்களை படிப்படியாக விடுவித்து வரும் நிலையில், கேப்பாபுலவு மக்களின் காணி, நிலங்களை விடுவிக்க இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டு, இந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்  ...
தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...
அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...