அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Thursday, July 23rd, 2020

அடைய முடியாத இலக்குக்காக ஆயுதம் தூக்கிய நாம், அதன் நியாயமற்ற தன்மையை உணர்ந்து,  அதற்கான மாற்று வழியாக இணக்க அரசியலை தெரிவு செய்துள்ளோம்.

எனது சாணக்கியமான நடைமுறைச் சாத்திய அரசியல் வழிமுறையூடாக எமது மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற திடமான நம்பிக்கை உண்டு . அதற்காகவே உங்களை நாடி ஈ.பி.டி.பி வருகின்றது. ஆகவே கடந்த கால தவறான தீர்மானங்களை விடுத்து நியாயமானவர்களின் பின்னால் அணி திரளுங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

பருத்தித்துறை கொட்டடியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் டக்ளஸ் தேவானந்த குறித்தஅழைப்பை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களின் ஊடாக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்காக தன்னால் திருப்தியடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் தேவைகளுடன் ஒப்பிடுகின்ற போது இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணப்படும் எனவும், குறிப்பாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அனைத்து கடற்றொழிலாளர்களும் தங்களுக்கு பொருத்தமான தொழில் முறைகளை  ஏனையவர்களுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்

Related posts: