வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – ரில்வின் சில்வா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/20171008_114140.jpg)
வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக இன்று வரை இறுதியானதொரு நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய சிறந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசயியம் எனவே வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என ஜே. வி.பியின் பொதுச் செயலாளரும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றி மக்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் கிடைக்கக் கூடிய புதிய அரசியலமைப்பு இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாகவிருக்கின்றோம்.
நடைமுறையிலுள்ள முதலாளித்துவ அமைப்பின் கீழ் புதிய அரசியலமைப்பு மூலமாகத் தமிழ்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்து விடும் எனவும் நம்பிவிட முடியாது. புதிய அரசியலமைப்பின் மூலமாக மக்களுக்கு ஒரு சில நன்மைகளாவது கிடைக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். செயற்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் உரையாடப்பட்டுள்ளதுடன் திட்ட வரைபொன்றும் வரையப்பட்டுள்ளது. ஆனால்இ இது இறுதி முடிவல்ல.
பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை எனவும் ஏனைய மதங்களுக்கு உரிமை வழங்குவதை நிறுத்தப் போவதில்லை எனவும் கூறியுள்ளது.
ஒற்றையாட்சியா? அல்லது பிரிக்கப்படாத நாடா? அல்லது ஒருமித்த நாடா? என்ற கருத்தாடலும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இது போன்ற பல விடயங்கள் வெறும் முன்மொழிவுகளாக மாத்திரமே இருக்கின்றதே தவிர இறுதி முடிவாக எந்தவொரு எழுத்துமூல ஆவணங்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பாராளுமன்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்படவுள்ள முதலாவது அரசியல் அமைப்பாகப் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு அமையவிருக்கிறது. நாடு முழுவதுக்குமான அரசியல் அமைப்பாக இந்த அரசியல் அமைப்புக் காணப்படுவதால் இனவாதமில்லாத அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய பொதுவானதொரு நிலைப்பாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் வந்தாக வேண்டும் எனவும் கூறினார்.
Related posts:
|
|