இலங்கை கடற்பரப்பிற்குள் சீன போர்க்கப்பல்?

Tuesday, September 17th, 2019


இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் போர்க்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி 81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது.

சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன.

இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன. தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: