11 நாடுகளின் உறுதியான ஆதரவுக்கு நன்றி – நடுநிலை வகித்த இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டு!

Wednesday, March 24th, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளின் உறுதியான ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்த இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 46/1 தீர்மானம் 22 வாக்குகளுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்த இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளின் உறுதியான ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவர்களால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் 25 வாக்குகளைப் பெறமுடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

11 நாடுகள் வாக்களித்துள்ளன என்பதுடன், மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்குலக நாடுகளினால் பெரும்பான்மையைப் பெறமுடியாமற் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தை ஜனாதிபதி மேலும் வலுப்படுத்தியுள்ளார் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts: