போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் – இராணுவ தளபதி தகவல்!

Monday, May 10th, 2021

ரமழான் பண்டிகையுடனான விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரமழான் விடுமுறை மற்றும் அடுத்த நாள்களில் வார இறுதி விடுமுறை என்பதால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்காமல் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய இதுவரையில் 6 பொலிஸ் பிரிவுகளும், 114 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் ரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இதற்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம்.

தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படமாட்டாது. அடுத்தடுத்த வாரங்கள் தொடர்பில் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமையவும் ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கமையவும் நாட்டுக்கு தேவையான பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.

அத்தோடு இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் 2000 இற்கும் அதிகளவானோருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்கக் கூடியவாறான வைத்தியசாலை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலைக்கான வைத்தியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, தாதிகளும் ஏனைய ஊழியர்களும் இரு தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எனவே நாட்டில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: