அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை தாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியிலுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் விரிவான அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு உளேயேயுள்ள ஒரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘சரியான பாதை’ என்ற மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரையும் விமர்சித்துள்ளதுடன் அத் தரப்பினர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் நிராகரித்துள்ளதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிதாக போக்குவரத்து அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் திலும் அமுனுகம நேற்றையதினம் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – அமைச்சர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அரசாங்கத்திற்கு சரியான பாதையைக் காட்டுவதற்காகவே சரியான பாதை என்ற யோசனையை முன்வைத்ததற்காக மேற்படி மாநாட்டை கூட்டியதாக தெரிவித்துள்ள அவர் ஆனால் அங்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மாறாக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் விமர்சித்தமையே இடம்பெற்றுள்ளது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்ற வேளையில் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக மேற்படி தரப்பினர் பெரும் பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர். நானும் அப்பொது அவர்களுக்கு நெருக்கமாக செயற்பட்டவன்.
பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி அனைவரும் ஒன்றிணைந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கமுடிந்துள்ளது. அதற்கான கௌரவத்தை நாம் எப்போதும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
அதேவேளை, அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை தாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதி இந்த தீர்மானத்தை கொள்கை ரீதியாகவே மேற்கொண்டுள்ளார். அதைவிடுத்து அவர், தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட தீர்மானமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|