வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு – வடக்கின் பல பாகங்களிலுமுள்ள மக்களுக்கு காணி உரிமங்களும் வழங்கிவைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/03/433697470_962498901898220_3878690404651559717_n.jpg)
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்குவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் எனும் உறுதியான நிலைப்பாட்டில் மாறி மாறி வந்த அரசுகளுடன் பேச்சுக்களை நடத்தி படையினர் வசமிருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பெரும்பாலான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொகுதி காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டு ஜனாதிபதியால் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் குறித்த காணிகளின் விபரங்கள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.
குறிப்பாக ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது
அச்சுவேலி வயாவிளான் ரெயிலர் கடை சந்திப் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது உயரதிகாரிகள் இராணுவத்தினர் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
இதேநேரம் படையினர் வசமிருந்த காணிகளை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க வருகைதந்த ஜனாதிபதி குறித்த பகுதியில் மரக்கண்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய யாழ்ப்பாணத்துக்குகான விஜயத்தின்போது காணி விடுவிப்பு, ‘உறுமய காணி’ உறுதிப்பத்திரம் வழங்கல், விவசாயிகளின் உற்பத்திக்கு நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய Farm to Gate என்ற வர்த்தக இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தல் பருத்தித்துறை வைத்தியசாலையில் புதிய நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் திறப்பு நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகளில் நடைபெற்றுள்ளன.
முன்பதாக இன்று காலை யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலாலியில் ஏற்பாடு செய்துள்ள பிரதான நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்திருந்தார்.
பலாலி விமானப்படைத் தளத்தில் நடைபெறும் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்போருக்கு ‘உறுமய’ காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்கிவைத்திருந்தார்.
இதேவேளை விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வான யாழ் மாவட்ட விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு தேசிய சர்வதேச மட்டத்தில் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான விவசாய திணைக்களத்தால், உருவாக்கப்பட்ட Farm to Gate செயலி (App) இணையத்தளத்தையும் அங்குரார்ப்பணம் செய்துவைத்திருந்தார்.
முன்பதாக கொழும்பிலிருந்து பாலாலி விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொன்னாடை போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
|
|