முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை – பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்பட்டன!

முல்லைத்தீவு கடற்பரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கூட்டு நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்காரணமாக முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் போன்ற சட்ட விரோத தொழில் முறைகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் குறித்த மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் மாவட்டத்தின் மீன்வளம் குறைவடைந்து வருவதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து கடற் படையின் கிழக்கு மாவட்ட தளபதி றியர் அட்மிறல் வை.எம். ஜெயரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் ஜோன்ஸன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் நிகஸன் ஆகியோருடன் கடந்த 18 ஆம் திகதி கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கூட்டுப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் கடற்படயினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்டுகின்ற நடவடிக்கைகளின் போது சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றினால் அவர்கள் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|