வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து -தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!
Friday, May 29th, 2026
…..
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீனவர்களது நிலை தொடர்பில் உறவினர்கள் பரிதவிப்புடன் உள்ளனர்.
மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரின் அசமந்த தனமான செயற்பாடு தொடர்பில் மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.
பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்றுமுந்தினம் (27) புதன்கிழமை கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
படகுகளில் சக மீனவர்கள் தேடிச்சென்ற நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சர் மற்றும்
கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் கடற்படையினர் தேடுதலில் ஈடுபடவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேடுதலுக்கு சென்ற மூன்று படகுகள் திரும்பிய நிலையில் சிறு பகுதி அளவு வலைத்துண்டு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட வலை கற்கோவளத்தில் இருந்து சென்ற மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


