ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Sunday, October 13th, 2024

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

எவ்வாறாயினும், இதுவரை 13 வேட்பாளர்கள் மட்டுமே செலவு அறிக்கையை வழங்கியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவழிக்கும் தொகையை 109 ரூபாயாகக் கட்டுப்படுத்தித் தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

இதன்படி, ஒரு வேட்பாளருக்கு அனைத்து வாக்காளர்களும் செலவிடக்கூடிய தொகை 186 கோடியே 62 இலட்சத்து 98 ஆயிரத்து 586 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று பிற்பகல் 3 மணியுடன் குறித்த கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கைகளை அதற்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: