கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

Sunday, March 22nd, 2026


….
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு இணையாக, முச்சக்கரவண்டிகளின் முதலாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இன்று (22) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பினால் முச்சக்கரவண்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை மாத்திரம் 20 ரூபாவினால் அதிகரிக்க முன்மொழிந்துள்ளார்.

இந்த அதிகரிப்பானது முச்சக்கரவண்டிகளில் மீற்றர்களைப் பயன்படுத்தும் சாரதிகளால் மாத்திரமே முறையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எமது சேவையை முன்னெடுக்க போதிய எரிபொருள் இல்லை, அதற்கும் மேலாக விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய’ கதையாக உள்ளது” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நிலவும் இந்த இக்கட்டான சூழல் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காக, விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது அறிவித்தனர்.
000

Related posts: