கடந்த 6 ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடை நிறுத்திய2 இலட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள்!

Tuesday, June 30th, 2026


….
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலப்பகுதியில் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2018 முதல் 2024 வரையான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், முதலாம் தரம் முதல் 10ஆம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகிய விகிதங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018,ல் 38,839 ஆகவும், 2019இல் 41,503 ஆகவும், 2020இல் 32,540 ஆகவும், 2021இல் 25,492 ஆகவும், 2022இல் 52,596 ஆகவும், 2023இல் 50,345 ஆகவும், 2024இல் 25,823 ஆகவும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை இடைநடுவில் நிறுத்தியுள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு இடைவிலகிய மாணவர்களில் சிலர் சர்வதேச பாடசாலைகளில் சேருதல் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் பாடசாலை அமைப்பிலிருந்து விலகினாலும், அவர்கள் தொடர்ந்து முறையான கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதற்குப் தனிப்பட்ட காரணங்கள், பாடசாலை சார்ந்த காரணங்கள், குடும்பம் சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

000

Related posts: