உயர் நீதிமன்றம் உத்தரவு –  விரைவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, January 1st, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் கசித்த 3 வினாக்களுக்குப் புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் உயர்நீதிமன்றம் பரீட்சைகள் திணைக்களத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, உயர் நீதிமன்றின் உத்தரவு தொடர்பில் ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவற்றை கருத்திற்கொண்டு மிக விரைவில், புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளையும் வெட்டுப்புள்ளிகளையும் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

00

Related posts: