வடக்கு விவகாரத்தில் நிதானம் அவசியம் – யாழ். ஆயர்!
Sunday, June 18th, 2017வடக்கு அமைச்சர்கள் விவகாரம் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில், நிதானமாகவும் சமாதானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அமைச்சர் எஸ்.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். ஆயரை சந்தித்து வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளை தெளிவுபடுத்தியுள்ளனர். இதன்போதே யாழ். ஆயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஊடகங்களிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்தோடு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் தொடர்பில், நிபந்தனைகளின் அடிப்படையில் சமாதான ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் யாழ். ஆயர் குறிப்பிட்டதாக மாவை தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு அமைச்சர்களது பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கலந்துரையாடி வருவதாகவும், முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படுமென தான் நம்புவதாகவும் ஊடகங்களிடம் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்
Related posts:
|
|