திருமலையில் அமெரிக்க கடற்படை முகாம்?

Saturday, April 29th, 2017

திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இந்தியா அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இணங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த இரண்டு நாடுகளும் இராணுவ மட்டத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனை அப்படையாகக்கொண்டு பல நடவடிக்கைகளை இந்த இரண்டு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான இடமாக இருப்பது திருகோணமலை துறைமுகம்தான். இந்தத் துறைமுகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில்தான் இந்த இரண்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்குதல் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையினர் இலங்கைக்குள் நுழையவுள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை அடிப்படையாகக்கொண்டே இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இலங்கையும் அமெரிக்காவும் இதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளன என்று ஓரிரு மாதங்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சர்வதேச சக்திகள் இன்று இலங்கைக்குள் மிக இலகுவாக நுழைந்து அதன் தேவையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு இடங்கொடுத்துள்ளது. நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம்.இந்த ஆபத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Related posts: