டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு: மக்களே அவதானத்துடன் செயற்படுங்கள் !

Sunday, January 21st, 2018

வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் டெங்கு சிவப்பு வலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் கற்குழி, நெளுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த 16 நாட்களில் 70 பேர் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனால் வவுனியாவின் கற்குழி, நெளுக்குளம் மற்றும் செட்டிக் குளத்தின் சில பகுதிகள் டெங்கு சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் டெங்கு சிவப்பு வலயத்தில் 16 நாட்களில் எழுபது பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்களாகவே இருக்கின்றனர். இதேபோல் இரண்டு வாரத்திற்கு முன்னரும் டெங்கு நோயின் தாக்கத்தில் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

எனவே வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களிற்குச் செல்லும்போது டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகள் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிடும்போது அதற்கான உரிய அவதானத்தை எடுக்க வேண்டும்.

மேலும் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். டெங்கு நோய்க்குரிய அறிகுறி தெரியும் பட்சத்தில் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

Related posts: