பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினரின் யோசனைகளை வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்ப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய விருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்திற்கான முன்னோடிப் பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தனியார் துறை பிரதானிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது அரச வருமானம் மற்றும் செயற்திறனைப் பலப்படுத்தல், முதலீட்டாளர்களை ஈர்த்தல், சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஊக்குவிக்கும் யோசனைகளை தனியார் நிறுவன பிரதானிகள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட பின்னர் முன்னெடுக்கும் திட்டங்கள், பல்வேறு துறைகளிலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியன குறித்தும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தனியார் துறையினர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு துறை தொடர்பிலும் தனித்தனியே கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: