வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களே  மேற்படி வறட்சி காரணமாக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இதன் பிரகாரம், வடக்கு மாகாணத்தில் சுமார் 1 இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமே மிக அதிகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாவட்டம் என்றும,; இங்கு சுமார் 33 ஆயிரத்து 165 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் சுமார் 32 ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 5 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குருனாகல், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

அந்தவகையில் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்கள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?  இதுவரையில் நிவாரணங்கள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளனவா?

அல்லது வழங்கப்பட்டுள்ளன எனில், என்னென்ன நிவாரணங்கள், எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன?

குடி நீர்த் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு, குடிநீர் கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து குடி நீரைக் கொண்டு செல்வதற்கும், குடி நீரை தேக்கி வைப்பதற்கும் வசதியாக பவுசர்கள், நீர்த் தாங்கிகள் போன்றவற்றினை வழங்குவதற்கு தங்களது அமைச்சின் மூலமாக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் மானியங்கள் உள்ளனவா? இல்லை எனில், இதற்கென ஒரு விஷேட திட்டத்தினை ஏற்படுத்த முடியுமா?

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடலை அண்டியப் பகுதிகளில் உவர் நீர் உட்புகுந்து கிடைக்கக்கூடிய குறிப்பிட்டளவு நிலத்தடி நீரிலும் உவர்த் தன்மை கலந்திருப்பதால், உவர் நீர்த் தடுப்பணைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பிலான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்;.

Related posts:

10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதா...
இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்...
நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...