தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு விசேட ஏற்பாடுகள் மூலம் நிறைவுசெய்து கொடுக்க முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 4th, 2016

1983ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் யுத்தப் பாதிப்புகள்  காரணமாக சுமார் 304269 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு சென்றதாகவும் இதில் சுமார் 204269 பேர் இதுவரையில் இலங்கை திரும்பியுள்ளதாகவும் தமிழ்நாட்டில் இன்னும் முகாம் பதிவுகளில் சுமார் 66000 பேரும் காவல்த்துறையினரின் பதிவில் 34000 பேரும் தங்கியுள்ளதாகவும். நாட்டு நிலமைகள் சீரடைந்துள்ளதால் குறிப்பிட்ட சிலர் அவ்வப்போது இலங்கை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. உரிய பதிவுகள் இல்லாத காரணத்தால் பலர் நாடு திரும்புவதில் பல்வெறுபட்ட சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர். எனவே தமிழகத்திலுள்ள இலங்கை அகதி மக்கள் இலங்கை திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு விசேட ஏற்பாடு என்ற வகையில் இலங்கை அரசே பொறுப்பேற்று நடைமுறைப்படுத வேண்டியது அவசியம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற விவாத நேரத்தில் நிலையியற் கட்டளை 23/2 வாய்மூல கேள்வி நேரத்திலேயே குறித்த கோரிக்கையை அவர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்களுக்கு மாதாந்தம் குடும்பத் தலைவருக்கென 1000 ரூபாவும் ஏனைய 02 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு 750 ரூபாவும் 02 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு 400 ரூபாவும் என வாழ்வாதார உதவிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கொடுப்பணவுகள் போதுமானதாக இல்லாத நிலையில் இம் மக்களில் பலரும் வேறு பல கூலி வேலைகளிலும் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கடந்த பல வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம் மக்கள் இலங்கையில் தற்போது சுமுகமானதொரு சூழல் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் இலங்கை திரும்ப முனையும்போது, பல்வேறு சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதால் அவர்களில் பலருக்கு தங்களது நாட்டுக்குத் திரும்பிவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அந்த வகையில் பிள்ளைகளைப் பதிவு செய்ய தமிழகத்திலுள்ள இலங்கைக்கான துணைத் தூதரகம் பிள்ளையின் பிறப்புச்சான்று தாயினதும் தந்தையினதும் பிறப்புச்சான்றுகள் மற்றும் திருமணப் பதிவினைக் கோருவதாகவும் இவை நான்கும் முக்கியம் எனக் கூறப்படுவதாகவும் தெரியவருகிறது.

இடப்பெயர்வுகள் இடம்பெற்று பலவருடங்கள் ஆன நிலையில் பலரது பிறப்புகள் பதிவு செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது. இவர்களில் பலர் இடம்பெயரும் நிலையில் வழியில் பிறந்தவர்களாக படகுகளில் மன்னார்க் கடற்கரையில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். மலையகத்தில் பிறந்தவர்கள் அவர்களது பெற்றோர் இல்லாத நிலையில் தங்களது பிறப்புகள் பற்றிய விபரங்கள் தெரியாது பதியாமல் உள்ளனர்.

எனவே, மேற்படி விதிமுறைகளை மாற்றி இப் பிள்ளைகளின் பதிவுகளை இலகுவாக்க எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா எனவும்

அகதி முகாம் பதிவுகளிலும் காவல்த் துறையின் பதிவுகளிலும் குறிப்பிட்ட காலம் இலங்கை அகதிகளாக வசித்து வருபவர்கள் தங்கள் பதிவுகளை அங்குள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் உறுதி செய்து அதனை இலங்கைத் துணைத் தூதுவர் பரிந்துரை செய்தால் அதனை ஒரு சட்ட ஓழுங்காக ஏற்று இப் பிள்ளைகளின் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா எனவும்

முறைசாரா திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளின் பிறப்புகளைப் பதிவு செய்வதற்கு ஏதாவது ஒழுங்கு விதிகளை உருவாக்க இயலுமா என்றும்

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்க தண்டக் கண்டணங்கள் அறவிடப்படுவதை நிறுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமாஎனவும் கோரிய டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் –

தமிழகத்தில் திருமணம் முடித்தவர்களுக்கும்  இலங்கையில் திருமணம் முடித்த சிலருக்கும் திருமணப் பதிவுச் சான்றுகள் உள்ளன. ஆனால் இலங்கையில் திருமணம் செய்து பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் பலர் இருக்கும் நிலையில் இவர்களது குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதற்கான இலகுவானதொரு நடவடிக்கையினை எடுத்து உதவ முடியுமா?

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள திருமண பதிவுச் சான்றுகள் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது அதில் என்ன மாற்றங்கள் அல்லது அதற்கு பதிலாக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை அம் மக்களுக்குத் தெளிவுபடுத்த ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

தமிழகத்தில் பிறந்து தற்போது 20 வயதைத் தாண்டியுள்ளவர்களுக்கு இலங்கை குடியுரிமைச் சான்று வழங்க தற்போதுள்ள நடைமுறைகளால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில் இதனை  இலகுபடுத்த முடியுமா? இவர்கள் தங்களது இலங்கை அகதிகளுக்கான பதிவுகளை உறுதிசெய்து குடியுரிமையைப் பெறக்கூடிய வகையிலான ஏற்பாடொன்றை நடைமுறைப்படுத்த முடியுமா? எனவும் தனது கேள்விகளை முன்வைத்தார். மேலும் –

தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் இலங்கை திரும்பிட ஒரு வழி கடவுச் சீட்டு வழங்கப்படுவதாகவும் இது வழங்கப்படுவதற்கான காலம் அதிகளவு என்பதால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரம் இதன் பயன்பாட்டுக் காலம் ஒரு வருடமென்றும் தந்தை இல்லாத சிறு குழந்தைகளை அழைத்து வருவதில்  இலங்கை தூதுவரின் நிபந்தனைகள் காரணமாகப் பாரிய சிரமங்களை அம் மக்கள் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடவுச் சீட்டு வழங்கப்படும் காலத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுக்க இயலாதா? அதன் பயன்பாட்டுக் காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரித்து தந்தை இல்லாத சிறு குழந்தைகளை அழைத்துவர தாயின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரம் பெறவும் ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா?

இலங்கையர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்றால் அதனை இலங்கையில் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிய வேண்டும் என்றும் அதற்கு சுமார் 3000.00 ரூபா வரை செலுத்த வேண்டும் என்றும் வெளிநாடுகளில் தொழில் கல்வி கற்றவர்கள் சுமார் 30000 ரூபா வரை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் வெளி நாடுகளுக்குச் சென்று கல்வி பயில்கின்ற ஏனையவர்களுடன் மேற்படி இந்தியாவிலுள்ள இலங்கை அகதி மக்களை ஒப்பிடாமல் இவர்களது நிலை கருதி இவ்வாறான அறவீடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? அத்துடன் மேற்படி கல்விச் சான்றுகளை எவ்வாறு முறைப்படுத்தி இவர்கள் இலங்கை திரும்பும்போது கொண்டுவர வேண்டும் என்பதையும் முன்கூட்டியே இவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தால் என்ன?

இலங்கைத் திரும்புகின்ற இம் மக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த காலத்தில் தாங்கள் பயன்படுத்திய மற்றும் சேமித்த பொருட்களை கொண்டுவருவதில் வரையறைகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம் மக்கள் தங்களது பொருட்களை கொண்டு வருவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் இலங்கை திரும்பும் நிலையில் அவர்களுக்கான உடைமைகள் எதுவும் இங்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளும் இல்லை.

இதனை கருத்தில் கொண்டு  இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாடு சென்ற இம் மக்கள் ஒரே தடவையில் பெருந்தொகையிலானோர் திரும்பி வரும்போது அவர்களுக்கும் அவர்களது  உடைமைகளை கொண்டுவருவதற்கும் ஏதுவாக  தமிழகத்திற்கும் இலங்கையின் வட பகுதிக்குமிடையில் இலவச கப்பல் சேவை ஒன்றை விசேட – தற்காலிக ஏற்பாடாக செய்து உதவ முடியாதா?

அல்லது, இவர்கள் தாங்களாகவே இந்தப் பொருட்களை கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் கொண்டுவர அனுமதி வழங்க முடியுமா?

கொண்டுவரப்படும் இம் மக்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு சுங்கத் தீர்வை விதிக்காமல் அப் பொருட்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

இலங்கை திரும்பும் அகதிகளுக்கு காணிகள் இல்லாத நிலையில் வீடமைப்புத் திட்டங்கள் மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு  அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்ன?

கடந்த சுமார் 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணிப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகின்ற காரணத்தினால் அரசு காணிக் கச்சேரிகளை நடத்தி இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களுக்கும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏனைய அனைத்து மக்களுக்கும் காணி  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

அரச மற்றும் பொது காணிகளை இனங்கண்டு அவற்றில் குடியேற்றத் திட்டங்களை அமைத்து காணிகளற்ற இந்த மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்தால் என்ன?

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்களுக்கு எவ்வாறான வீட்டுத் திட்டங்கள் வாழ்வாதார உதவிகள் அடிப்படை வசதிகள் என்பன வழங்கப்படுகின்றன?

எனவே தமிழகத்திலுள்ள இலங்கை அகதி மக்கள் இலங்கைத் திரும்பும் அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு விசேட ஏற்பாடு என்ற வகையில் இலங்கை அரசே பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது என்பதை கௌரவ பிரதமர் அவர்களுக்கு சுட்டிக் காட்டுவதுடன்  அதனை அவர் தனது மேலான அவதானத்தில் எடுத்து மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும் இவை தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன். என கூறினார்.

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜன...
மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...

எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களு...
மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக்  கட்டுப்படுத்த  நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!