வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக்  கட்டுப்படுத்த  நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 23rd, 2017
நாட்டில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் பல இருக்கின்ற நிலையில், தென் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிய ரயில் பாதையில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற கடவைகளின் ஊடான விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், அனுராதபுரம் ரயில்வே அத்தியட்சகரின் கீழான மாவட்டங்களில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 2017.07.31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ரயில் விபத்துகள் காரணமாக சுமார் 95 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும், 134 வாகனங்கள் சேதமாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் மின் விளக்கு சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வடக்கின் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் ஊடாக அதிகரித்து வருகின்ற விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில், பாதுகாப்புக் கடவைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23.08.2017) போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமால் சிறிபால டி சில்வா அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தார்.
அதே நேரம், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களாக சுமார் 3,628 பேர் கடமையாற்றி வருவதாகவும், இவர்களில் சுமார் 1230 பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருவதாகவும், இவர்கள் அரச, தனியார், தற்காலிக போன்ற எவ்விதமான தொழில் அந்தஸ்துகளும் இன்றி, அடிப்படைத் தொழில் சட்டத்திற்கு முரணான வகையில் பணியில் அமர்த்தப்பட்டள்ளதாகவும், நாளொன்றறுக்கு 8 மணி நேரம் பணியாற்றும் இவர்களுக்கு நாளொன்றுக்கு 250 ரூபா வீதமாக மாதாந்தம் 7,500 ரூபா மாத்திரமே ஊதியம் வழங்கப்பட்டும், விடுமுறைகள் எதுவும் வழங்கப்படாதும் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாட்டிலுள்ள சுமார் 688 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்கென பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி 2,064 பேர் இவ்வாறு பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருவதுடன், இவர்கள் தங்களது தொழில் ரீதியிலான அந்தஸ்து மற்றும் ஊதிய உயர்வு கோரி இதற்கு முன்பதாக பணித் தவிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நபர்களை இலங்கை புகையிரதத் திணைக்கள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டா? என்றும் இல்லை எனில், இவர்களது பணிகளுக்கான அந்தஸ்தினைப் பெறவும், அப் பணியாளர்களது வாழக்கையை முன்னெடுத்துச் செல்வதற்குப் போதுமான ஊதிய நிர்ணயம் மற்றும் தொழில் உரிமைகளைப் பெறவும் ஏற்புடைய மாற்று ஏற்பாடுகள் யாவை? என்றும் கேள்விகளை முன்வைத்து இக்கேள்விகளுக்கான பதிலை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விரைவாக வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Related posts:


தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான...
அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...