பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, May 5th, 2017

முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டு வருவது தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (05) நாடாளுமன்றத்தில் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் தலைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள், மற்றும் விஷேட தேவைகள் கொண்டவர்களில் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு, முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு குடியமர்த்தப்பட்டன. இக் குடியேற்றமானது 50 வீட்டுத் திட்டம் என அழைக்கப்படுகின்றது.

இக் குடியேற்றத் திட்டத்தில், மின்சாரம், தண்ணீர், முன்பள்ளி, பாடசாலை போன்ற வசதிகளின்மை, பிரதான வீதி முதல் உள்ளக வீதிகள் வரை புனரமைப்பின்மை காரணமாக, இக் குடியேற்றத் திட்டத்தைக் கைவிட்டு மக்கள் வெளியேறுகின்ற நிலையே உருவாகியுள்ளதாகவும், அந்த வகையில் தற்போது 28 குடும்பங்கள் வெளியேறியுள்ளன எனவும் தெரிய வருகின்றது.

நேரடி யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள எமது பகுதிகளில் வீடில்லாப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உள்ள நிலையில், கடினமான முயற்சியின் பயனாகக் கிடைத்து, பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் அமைக்கப்பட்ட வரலாறு தங்களுக்குத் தெரியும் என எண்ணுகின்றேன். எனவே, வீடுகள் இவ்வாறு கைவிடப்படும் நிலையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, உயிலங்குளம் 50 வீட்டுத் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு சாதகமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், இவ்வாறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அக் குடியேற்றத்தைக் கைவிட்டுச் சென்ற குடும்பங்கள் மீளக் குடியேற வராத நிலை உறுதி செய்யப்பட்டால், காலியான வீடுகளை வேறு மாற்றுத்திறனாளிகளுக்கோ, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ வழங்கக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...

ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை  அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவாகு - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
வடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...