கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, February 9th, 2017
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்படும் வினா நேரத்தின்போதே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
திருகோணமலை மாவட்டத்தில், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை (உப்புவெளி)யின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான கரடிப்பூவல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 55 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக 1991ம் ஆண்டளவில் அங்கிருந்து இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அக் கிராமத்தில் மீளக் குடியேறியுள்ளதாகவும், இக்கிராமத்தில் தாங்கள் வசிப்பதற்கேற்ப அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார வசதிகள் இன்மை காரணமாகத் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடற்றொழில் மற்றும் செங்கல் தயாரிப்பு போன்ற தொழிற் துறைகளைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த இம் மக்கள், தற்போது கடற்றொழில் மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்படுவதாகவும், செங்கல் தயாரிப்பில் ஈடுபட அதற்குரிய மண் வளம் அப் பகுதியில் அற்றுப் போயுள்ளதாகவும் தெரிவிக்கும் நிலையில், இதன் காரணமாக தற்போது பொருளாதார ரீதியில் பாரிய இன்னல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அரச அபிவிருத்திப் பணிகளில் தங்களது கிராமம் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் இப் பகுதி மக்களுக்கென நிரந்தர வீடுகளையும், மலசல கூடங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும், தங்களது கிராமத்திற்குரிய பிரதேச சபை சுமார் 10 வருட காலமாக தமிழ்த் தரப்பினர் வசமிருந்தும், தங்களது கிராமம் தொடர்ந்து புறக்கணிப்பு நிலைக்கே உட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், பாதைகள், உள் வீதிகள், வெள்ளக் கால்வாய்கள், முருகன் கோவில் புனரமைப்பு, விளையாட்டு மைதானப் புனரமைப்பு மற்றும் கடற்றொழில்களை மேற்கொள்வதற்கான வசதிகள் என்பன இவர்களது தேவைகளாக முன்வைக்கப்படுகின்றன.
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா?
மேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை தொடர்பான விளக்கத்தையும் கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

10.-1-300x229

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ள...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...