புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் புதிய அரசியல் யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் நாம் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் ஒற்றையாட்சியா?  சமஸ்டியா? என்ற வாதச்சண்டைக்குள் தீர்வு முயற்சிகள் முடங்கிப்போய் விட நாம் அனுமதிக்க முடியாது. தீர்வின் பெயர் எமக்கு பிரதானம் அல்ல. அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியலமைப்பு வரைபு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டு. பகிரப்பட்ட அதிகாரங்கள் நிலைபேறானதாகவும் மீளப்பறிக்கப்பட முடியாதவையாகவும் இருத்தல் வேண்டும். இறைமையுள்ள மாகாணங்களை கொண்ட இறமையுள்ள நாடாக இருத்தல் வேண்டும். மதச்சார்பற்ற, இரு மொழிக்கொள்கையுள்ள நாடாகவும் இருத்தல் வேண்டும்.

இதே வேளை, தமிழ் பேசும் மக்களுக்கு விசேட அதிகாரங்களை கொண்ட அரசியல் ஏற்பாடு உள்ளடக்கப்பட வேண்டும். இவைகள் மட்டும் இருந்தால் போதும். இத்தைகைய தெரிவிற்கு எந்தப்பெயரை சூட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம்.

ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களின் பார்வையில் சிங்களப்பிசாசு! சமஸ்டி என்றால் சிங்கள மக்களின் பார்வையில் தமிழ்ப்பிசாசு!! இரண்டுமே பிசாசுகள் அல்ல என்பதை தெளிவூட்ட விரும்புகிறேன்.

பெடரல் பார்ட்டி என்று சிங்கள மக்கள் மத்தியில் சமஸ்டிக்கட்சியாகவும், தமிழரசுக் கட்சி என்று தமிழர்கள் மத்தியில்  தனியரசு கட்சியாகவும் இருதரப்பையும் ஏமாற்றியது போல் இரட்டை வேடம் இனியும் வேண்டாம்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முகமும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டும் மாய வித்தைகளை அரசியல் தீர்வு விடயத்திலும் காட்டுவதை அனுமதிக்க முடியாது. அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,  அதனை மீளமைப்பதற்குமான அதிகாரங்கள் மத்திய அரசிற்கே உண்டு என இங்கு கொண்டுவரப்படும்  வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசினால் குறைக்கவும் முடியும், பறிக்கவும் முடியும், மாகாண சபை முறைமையை அகற்றிவிடவும் முடியும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, இது  ஒருமித்த  நாட்டிற்குரிய  அதிகாரங்கள் அல்ல என்றும் மாறாக, ஒற்றையாட்சிக்குரிய பண்புகளையே கொண்டிருக்கிறது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பாலை, வெள்ளிக்கிண்ணத்தில் குடித்தாலும், பொற்கிண்ணத்தில் குடித்தாலும், பால் வெள்ளியாகவோ, பொன்னாகவோ மாறிவிடப்போவதில்லை. பால் என்றும் பால்தான். அதே போல் ஒற்றையாட்சிக்குரிய  அதிகாரங்களை  கொண்டிருக்கும் அரசியல் யாப்பிற்கு ஒருமித்த நாடு என்று பெயர் சூட்டி விட்டால் ஒற்றையாட்சி  சமஸ்டியாக மாறி விடாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்த வரைபில் என்னால் காணக்கூடியதாகவுள்ள சில விடயங்கள் தொடர்பில் சில யோசனைகளை கால அவகாசம் கருதி, சுருக்கமாக  முன் வைக்க விரும்புகின்றேன்.

ஆரசியலமைப்பு வரைபிலே மொழி என்ற தலைப்பின் கீழான 52 (2) ஆம் சரத்திலே எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் வாழும் சிங்கள அல்லது தமிழ் மொழிச் சிறுபான்மையினர் மொத்த சனத் தொகையின் எட்டில் ஒன்றினை மிகைத்து ஜனாதிபதியினால் அவ்வாறாகப் பிரகடனப்பத்தப்படுகையில், அப் பிரதேச செயலகப் பிரிவின் அரச பதிவுகளினைப் பேண சிங்களமும், தமிழும் பயன்படுத்தப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு கொழும்பு போன்ற பகுதிகளுக்கு ஏற்புடையது எனினும், நாட்டின் நாடாளுமன்றம் உள்ளடங்கலாக அமைச்சுக்கள்,  தலைமை அரச திணைக்களங்கள் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுரவுக்கு இது ஏற்புடையதாக அமையாது. எனவே, இரு மொழிக் கொள்கையானது அமுல்படுத்தப்படல் வேண்டும் என்ற விடயத்தினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மத்திய நிறைவேற்றாளர் – குடியரசின் தலைவர் என்கின்ற தலைப்பின் கீழான 90 (1) என்ற சரத்தில் அமைச்சரவையின் செயலாளரை பிரதமர் நியமிக்கலாம் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் நீக்கப்பட்டு, தற்போதைய நிலையில் இருப்பதைப் போன்று ஜனாதிபதியால் அமைச்சரவையின் செயலாளர் நியமிக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுவதையே நான் விரும்புகின்றேன்.

இரண்டாம் சபை என்கின்ற தலைப்பின் கீழ், இரண்டாம் சபைக்கு 55 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் சபையானது சிறுபான்மை இன மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கொண்டுவரப் படுவதால் 50க்கு 50 என்ற விகிதாசாரத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை இன ரீதியில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.

ஏனெனில், மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாமல் இருப்பதற்கும் இந்த 50க்கு 50 என்ற இன விகிதாசார உறுப்பினர்கள் தேர்வே சிறந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் பற்றி இங்கே       குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக 4 ஆசனங்கள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று கிழக்கு மாகாணத்திலிருந்தும் யுத்தச் சூழ்நிலை காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் வரையில் இடம்பெயர்ந்திருப்பதால், கிழக்கு மாகாணத்திற்கும் 3 மேலதிக ஆசனங்கள் தேவை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், இந்த வரைபில் மாகாண சபைகள் குறித்ததான தலைப்பின் கீழான 241 (3) சரத்தில் ஜனாதிபதியினால் அதிகார பத்திரத்தின் ஊடாக ஆளுநரை தெரிவு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுநர்கள் நியமனம் பெறுகின்ற நிலையில் அவர்கள் எதேச்சதிகாரங்களுடன் நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால், பிரதமருடன் கலந்தாலோசித்து, முதலமைச்சரின் ஒத்திசைவோடு, ஜனாதிபதியால் ஆளுநர் நியமிக்கப்படல் வேண்டும் என்ற விடயமே சிறந்ததாக அமையும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இதே தலைப்பின் கீழ் 243 (1) எனும் சரத்தில் மாகாண சபைக்கு முதலமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் எனக் குறிப்படப்பட்டுள்ளது. மாகாண சபையொன்றில் அங்கம் வகிக்கின்ற மொத்த உறுப்பினர்களில் 5ல் 1 பகுதியினரை அமைச்சர்களாக்கலாம் என்ற யோசனையை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

அத்துடன், 244 (5) சரத்தில் நியதிச் சட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள வகையில் நியதிச் சட்டங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்த பின்னர் அங்கீகாரத்திற்காக மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் அதனை வர்;த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தின்போது, மாகாண சபைக்கென ஒழுங்கு பத்திர முறைமையொன்றைக் கொண்டு வந்து, ஒழுங்கு பத்திரத்தில் அதனை மாகாண சபைக்கு சமர்ப்பித்து, மாகாண சபையின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கலாம் என்ற யோசனை சிறப்பானதாக இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

மாகாண பொலிஸ் என்ற விடயம் தொடர்பிலான 277 சரத்தில் மாகாண பொலிஸ் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றபோது சிரேஸ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மாகாணத்திற்கு பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்படல் வேண்டும் என இருக்கின்றது. இது ஏற்புடையதாக இருக்காது என்றே நான் நினைக்கின்றேன். எனவே இந்த ஆணையாளர் என்ற சொற் பதத்திற்குப் பதிலாக மாகாண உதவிப் பொலிஸ் மா அதிபர் என மாற்றப்படுதல் ஏற்புடையதாக அமையும் என நான் எண்ணுகின்றேன்.

அதே நேரம், பொது மக்கள் பாதுகாப்பு என்ற விடயத்தின் கீழான இதன்  291 (ஆ) எனும் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அதிலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக மாகாண சபையினை கலைத்துவிட முடியும் என்கின்ற விடயத்தின்போது, ஒரு மாகாண சபை கலைக்கப்பட்டால், மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதுவரையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் அங்கு இருக்காது. இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, உரிய காரணங்களுக்காக மாகாண சபையினை கலைத்துவிடலாம் என்பதற்கு பதிலாக குறித்த மாகாண சபையினை இடைநிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடொன்றினை அதில் குறிப்பிடலாம் என்ற யோசனையை இங்கு நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

அரசியலமைப்புச் சபை பற்றி இங்கு  226 (1)  (ஏ) எனும் சரத்தில் பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவரால் பெயர் குறிப்பிடப்படும் 5 பேரினை ஜனாதிபதியால் நியமித்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் 5 பேர் என்பதை 6 பேர் என அதிகரித்து, அந்த 6 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களல்லாதவர்களாகவும், தகுதிவாய்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என அமையப் பெறுதல் வேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

மேற்படி அரசியல் யாப்புச் சபையே ஆணைக்குழுக்களை  நியமிக்கும் என்பதால், மாகாணத்திற்கு மாகாண அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நிலம் குறித்து 13 வது திருத்தச்சட்டத்தில் மக்களுக்கான அரச காணிகள் பகிர்ந்தளிப்பு தொடரபான அதிகாரங்கள் புதிய அரசியலமைப்பு வரைபில் முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, 13 வது திருத்தச்சட்டத்தில் இருந்த மக்களுக்கான அரச காணி பகிர்ந்தளிப்பு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான விடயத்தையே புதிய அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நான் வலியுறுதுகின்றேன். இதன்போது, 1981ஆம் ஆண்டிற்கான சனத் தொகை மதிப்பீட்டினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் கட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல், மாகாண சபைக்கான பட்டியல் மற்றும் இடைக்காலப் பட்டியல் என்பன இந்த வரைபில் உள்ளடக்கப்படவில்லை. இதை நான் ஏற்கனவே நெறிப்படுத்தல் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் உள்ளடக்கியிருந்தேன். எனவே, மேற்படி பட்டியல்களையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

1972  இலும் 1978 இலும்  கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புகளின் போது தமிழ் பேசும் தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது. அமைதிப்பூங்காவாகவே இருந்திருக்கும்.

காலம் சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் 90 களின் நடுப்பகுதியில் மிகச்சிறந்த ஓர் தீர்வு வரபை தயாரித்திருந்தார்.

அரசியலை ஒரு தொழில் போல் கருதாமல். தனது அரசியல் கடமையாக கருதியதாலும். தரகு அரசியலை நிராகரித்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பவராக இருந்ததாலுமே கலாநிதி  நீலன் திருச்செல்வம் அவர்கள் அந்த வரைபை சிறந்த முறையில் தயாரித்திருந்தார்.

ஆனாலும், கான மயில்கள்  களமாடிய இடத்தில்  வான் கோழி வந்து தானும் ஆட நினைப்பது போல்,அசல்கள் இருந்த இடத்தில் நகல்கள் வந்து உட்கார்ந்திருப்பதால் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் யாவும் இன்று தரகு அரசியலுக்காக விலை பேசப்படுகின்றது.

மேய்ப்பவர்கள் கதை கேட்டு வழி தடுமாறிச்செல்ல தமிழ் மக்கள் மந்தைகள் அல்ல. வழிகாட்ட வேண்டிய அரசியல் தலைமைகள் எமது மக்களின் மேய்ப்பவர்களும் அல்ல.

அரசியல் பலம் பெற்று சிலர் அதிகாரத்தில் உட்கார்ந்தால் அது அவர்களுக்கு மட்டுமே உயர்ச்சி. அதே அரசியல் பலத்தோடு நாம் அதிகாரத்தில் உட்கார்ந்தால் அது தமிழினத்திற்கே உயர்ச்சி!

அதை எமது வரலாற்றில் மெய்ப்பித்து காட்டியவர்கள் நாங்கள். சொல்வதை செய்வதும். செய்வதை சொல்வதுமே எம் வழியாகும். உள்ளதை சொல்வதும், நல்லதை செய்வதுமே எம் பணியாகும்.

பிரித்தானியாவின் ஒற்றையாட்சி முறைமைக்குள் சமஸ்டிக்கு நிகரான அதிகாரங்களை அனுபவிக்கும் ஒரு அயர்லாந்து போல், ஸ்கொட்லாந்து போல் தமிழ் பேசும் மக்களும் தலை நிமிர வேண்டும்.

Related posts:

பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட...

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ந...
அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் - டக்ளஸ் தேவானந்தா!
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...