பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 21st, 2018

கடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலத்தை மேலும் நீடித்து தமது ஆளுமைக்கு கீழ் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது வேடிக்கையானதாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நோயாளர் வண்டிச் சேவையானது கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக செயற்படுவது அவசியம்!

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சுகாதார, வைத்திய சேவைகள் அத்தியாவசியமானதாகி உள்ளது.  இருபத்திரண்டு (22) மில்லியன் மக்களைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதமான மக்கள் கிராமப் புறத்திலேயே வாழ்கின்றார்கள். அவர்களுடைய சுகாதாரத் தேவைகளை உரிய காலத்திலும், உயரிய தரத்திலும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்

இலங்கை மக்கள் அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படும் போதும் ஆபத்துக்களின்போதும் விபத்துக்களின்போதும் அவர்களுக்கு உடனடியாக முதலுதவிச் சேவையும் வைத்திய வசதியும் அவசரத் தேவையாக இருக்கின்றது. நோயாளர்களுக்கு உடனடி முதலுதவிகளைச் செய்வதற்கும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மிகத்துரிதமாக அன்மையிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் போதுமான வசதிகளை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.

அனர்த்தங்கள் அல்லது விபத்துக்கள் நடைபெற்ற இடத்திலிருந்து நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் சாதாரண போக்குவரத்து ஏற்பாடுகள் காலதாமதமாகவே அமைவதுடன் பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு பாதிக்கப்பட்ட நோயாளியை உடனடியாக எடுத்துச் செல்வதற்கு துரிதமான போக்குவரத்து ஏற்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

எனவே அவசர மருத்துவ உதவி தேவையாக இருப்பவர்களையும் எதிர்பாராத அனர்த்தம் அல்லது விபத்தில் காயப்பட்டவர்களையும் துரித கதியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுவதற்கு நம்பத்தகுந்த நோயாளர் வண்டிச் (அம்புலன்ஸ்) சேவையொன்று அத்தியாவசியமாகும்.

நமது நாட்டில் ஏறத்தாழ 15000 கிராமங்கள் உள்ளன. அப்பிரதேசங்களிலிருந்து நோயாளிகளை சிகிச்சைக்காக அல்லது மேலதிக சிகிச்சைக்காக ஆதார வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்தியசாலைக்கோ அல்லது போதான வைத்தியசாலைக்கோ கொண்டு செல்லுவதற்கு போதுமான அளவு நோயாளர் வண்டிகள் (அம்புலன்ஸ்) நமது நாட்டில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இந்த முயற்சியை நாம் வரவேற்கின்றோம்.

இந்தியாவில், குறிப்பாக சென்னை மாநகரத்தின் முக்கிய வீதிச் சந்திகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியர், தாதிச் சேவையினர் முதலுதவியாளர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு விபத்து ஆபத்து நடந்தவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்களை  உடனடியாக இந்த அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் விபத்தில் காயமடைந்தவர் அல்லது தனது உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர் உடனடி வைத்திய வசதிகளைப் பெற்று காப்பாற்றப்படுகின்றார்கள்.

இதனை முன்மாதிரியாக கொண்டு கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இத்திட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க்கதக்கதாகும்.

இதே போன்று கிராமப்புறங்களில் மகப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு இந்த துரித நோயாளர் வண்டிச் சேவை உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அண்மையில் தாமரைக் கோபுரத்தில் மின்னுயர்த்தியில் பொருத்தும்; வேலைகளைச் செய்து கொண்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது கட்டிட தொழிலாளி தவறிவிழுந்து அகால மரணமடைந்தார்.

இவரின் சடலத்தை கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டிலுள்ள பெற்றோரிடம் கையளிப்பதற்த அரச சார்பற்ற நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்ட பிரேத காவு வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படுவதாக அந்த குடும்பத்திற்கு கூறப்பட்டபோதும் பின்னர் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு மரணித்தவரின் சடலத்தைக் கொண்டு செல்வதற்காக ரூபா 30000ம் வாகனச் செலவாக கோரப்பட்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். வறுமையில் வாழும் அந்தக் குடும்பத்தினரை அவ்வாறு ஏமாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஒருவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையானது நகர்ப்புறங்களில் முடங்கிவிடாமல் கிராமப் புறத்தில் வாழும் மக்களுக்கு உதவக்கூடியவாறு செயற்படுத்தப்பட வேண்டும். நகர் புறத்தில் வாழும் மக்கள் கணிசமானவர்கள் வாகன வசதிகளோடு வாழ்வதால் அவர்கள் ஏதோ ஒரு வாகன ஏற்பாட்டுடன் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துவிடக் கூடும். ஆனால் கிராமங்களில் வாழும் மக்கள் இவ்வாறான சேவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தெரியாமலும் இவ்விதமான சேவைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றது என்பது புரியாமலும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்

அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் –

எமது நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றபோதும் இந்தத் திட்டங்களுக்கு அரசாங்கம் சூட்டும் திட்டப்பெயர்களும் அத் திட்டங்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் வசதிகள் என்பன நாட்டிலுள்ள அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியானதாக இருப்பதில்லை என்பதை நான் இந்த உயரிய சபையில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சுட்டிக்காட்டிய பல புரியாத திட்டப் பெயர்கள் பின்னர் புரியும்படியாக தமிழில் திருத்தப்பட்டுள்ளது அதற்காக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்ததுக் கொள்கின்றேன்

அதுபோலவே இன்று நாம் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் “சுவசெரிய” என்ற திட்டமும் சாதாரண மக்களுக்கு குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்களுக்கு புரியும்படியாக இல்லை. இந்தத் திட்டம் என்ன? என்பதையோ இந்தச் சொல் என்ன? அர்த்தத்தைக் குறிக்கின்றது என்பதையோ இலகுவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே “சுவசெரிய” எனும் சொல்லின் அர்த்தத்தை தமிழ் பேசும் மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோலவே இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையை மலையகம் வடக்கு கிழக்கில் செயற்படுத்தும்போது சாரதிகளாகவும் நோயாளர் உதவியாளர்களாகவும் கடையாற்றுவோர் அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவகையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஏன் என்றால் அந்த மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலும் அந்த மக்களின் பிரச்சனைகள் தேவைகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த சேவையில் ஈடுபடுவோர் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த துரித சேவை ஊடாக இந்த நாட்டு மக்கள் பயன்பெறுவார்கள் என்று கருதும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களின் எண்ணம் நிறைவேறும்.

வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் – 

வட மாகாணத்தில் நோயாளர் வண்டிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் முதலுதவிச் சிகிச்கை அளிப்பதற்கான சான்றிதழ் தகமையைப் பெற்ற தாதியர்களும; ஏராளமான தொகையினர் வடமாகாணத்தில் இருக்கின்றபோதும் அங்கே வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சாரதிகளாகவும் சௌக்கிய ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவதால் அங்குள்ள தகுதியானவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர்

ஊழியர் நியமனங்களில் இவ்வாறு நடைபெறும் குறைபாடுகளுக்கும் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் கவலையீனங்களுக்கும் அதிகாரத் துஸ்பிரயோகங்களுக்கும் வடக்கு மாகாணத்தில் நேர்த்தியான அரசியல் வழிகாட்டல் இல்லாமையும் வடக்கு மாகாணசபையின் செயற்றின்மையும் பிரதான காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்று நிர்வகிப்போர் அந்த மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயிருப்பதற்கும் காரணமாக இருப்பதைப்போன்று, சுகாதார வசதிகள் உரியவாறு மக்களுக்கு கிடைக்காமல் அந்த மக்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவிப்பதற்கும் காரணமாக இருக்கின்றார்கள்.

30 வருடத்திற்கு மேலான யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் வடமாகாணத்தில் விN~டமான மருத்துவ உதவிகளை நாடி நிற்பவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்கவோ அவர்களுக்கு இவ்வாறான துரித நோயாளர் வண்டிச் சேவைகளை ஏற்படுத்திக்கொடுக்கவோ மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே சுகாதார அமைச்சராக நியமித்தவர் அதிகாரத் து~;பிரயோகத்தைச் செய்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு செயற்திறனோடு செயலாற்றவில்லை என்றும், வைத்திய உபகரணங்கள் கொள்வனவு மற்றும் ஆளணி உள்வாங்கள் நடைமுறையிலும் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை நடத்துவதாகவும் கூறியிருந்தார். அந்த விசாரணைகளின் முடிவாக சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் நடைபெற்றதாக கூறப்பட்ட அதிகாரத் து~;பிரயோகங்களுக்கும் மோசடிகளுக்கும் முதமலமைச்சர் விக்கினேஸ்வரனால் பரிகாரம் காணப்பட்டதாகவோ தவறுக்கு உரியவாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இதுவரை வடக்கு மக்கள் எதையும் அறியவில்லை.

இவ்வாறு முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் பொறுப்பற்று செயற்படுவதால் அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சில சுகாதார துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதில் அசமந்தமாகச் செயற்படுவதால் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் – 

கடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலத்தை மேலும் நீடித்து தமது ஆளுமைக்கு கீழ் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது வேடிக்கையானதாகும்.

அவர் ஒரு முன்னாள் நீதியரசர் என்றபோதும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து தமக்கு முதலமைச்சராக பதவி நீடிப்புச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும்வரை அது மாகாணத்தின் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்படும் என்பது நியதியாகும்.

இந்திலையில் பதவி ஆசையும் அந்தப் பதவியின் சுகபோகங்களுக்குள் இருந்து கொண்டு சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாகவுமே பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என்று கேட்கின்றாரே தவிர யுத்த வடுக்கலோடும் பொருளாதார வறுமையோடும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யாத முதலமைச்சரும் அவரது சகாக்களும் எதிர்காலத்தில் எதையும் செய்வார்கள் என்று வட மாகாண மக்கள் நம்பவில்லை.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பாக நான் விடுக்கும் வேண்டுகோளானது வடக்கு மாகாண சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததும் கால தாமதமின்றி உடனடியாக வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என்பதாகும்.

புதிய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு கால தாமதம் எடுக்குமாக இருந்தால்பழைய தேர்தல் முறையில் தேவையான சிறு திருத்தங்களை செய்து கொண்டு உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும். கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாணசபையினால் பெற்றுக்கொள்ள வேண்டிய பலாபலன்களை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts:

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...