செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2010 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, July 7th, 2010

கௌரவ சபாநாயகர் அவர்களே!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் என்மீதும் எனது கட்சியாகிய ஈ.பி.டி.பி. மீதும் தவறானதும் உண்மைக்குப் புறப்பானதுமான அவதூறுகளைப் பரப்புவதற்கு ஒரு மேடையாக இந்த உயரிய பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் மிகவும் கவலையுடன்  உங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கு குறித்து எமது கட்சி முன்வைத்திருக்கும் தீர்வுத்திட்;டம் போன்ற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் காரணமாக எமது கட்சிக்குத் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அனைத்துத் தரப்பினரதும் அங்கீகாரம் தமிழ் மக்களின் பேராதரவும் பெருகிவரும் ஒரு சூழ்நிலையில் இதனைக் கண்டு சகிக்க முடியாதவர்களே எமது கட்சிமீது உண்மைக்குப் புறம்பான கட்டுக்தைகளைக் கட்டவிழ்த்து வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான எமது கட்சிமக்களிடம் இருந்து கப்பம் வரி போன்ற மக்;கள் விரோத அறவீடுகளிலோ அல்லது கொள்கை கொலை போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளிலோ எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபட்டது கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உயரிய சபையில் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நிலையில் சிலர் எம்மீது வீண் அவதூறுகளைச் சுமத்துவதன்மூலம் அரசியல் பிழைப்பை நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே எங்கள்மீது குற்றஞ்சாட்டி பாராளுமன்றத்தில் நீதிமன்றத்தையே அவ மதிக்க எத்தனித்துள்ளனர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த வகையில் கடந்த 2010.06.30ம் திகதி யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றில் உரையாற்றுகையில் தனது கணவர் அமரர் மகேஸ்வரன், சாவகச்சேரியைச் சேர்ந்;த மாணவன் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது கொலைகள் தொடர்பாகவும் மற்றும் வடமாகாணத்தில் நீதிபதிகளினுடைய இடமாற்றம் தொடர்பாகவும் என்னைச் சம்பந்தப் படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கொலை நடைபெற்ற இடத்தில் அக்கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கையுமெய்யுமாகக் கைது செய்யப்பட்டமை எல்லோரும் அறிந்த உண்மையாகும். கைதுசெய்யப்பட்டவர் புலிகள் இயக்க பிஸ்ரல் குழு உறுப்பினர் என்பது விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் நன்றாக அறிவர்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அமரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் எமக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. ஆயினும் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என புலிகளால் எச்சரிக்கப்பட்ட பின்னர் அவர் புலிகளின் எச்சரிக்கையினையும் மீறி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட இருந்தவேளை புலிகளால் சுடப்பட்டு படுகாயமுடுற்றார். அதன் பின்னர் அவரது இறுதிக்காலங்களில் அவருக்கும் எனக்கும் உறவுகள் இருந்துவந்தன. இதன் தொடர்ச்சியாக அமரர் மகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் அவரை ஊடகமொன்றுக்கு செவ்வி கண்டிருந்தது. இதன்போது எமக்கும் எமது கட்சிக்கும் எதிர்த்துக் கருத்துக்களைக் கூறுவதற்கு குறித்த ஊடகத்தின் நிகழ்ச்சியாளரால் கௌரவ மகேஸ்வரன் அவர்கள் திட்டமிட்ட வகையில் தூண்டிவிடப்பட்டிருந்தார் என்றே நான் கருதுகின்றேன். இந்தச் செவ்வியை பார்த்தவர்கள் பலரும் இந்தக் கருத்தையே கூறியிருந்தனர். குறித்த மேற்படி ஊடக நிகழ்ச்சியினூடாக மக்கள் அரங்கில் திட்டமிட்ட வகையில் எமக்குள் இருந்த முரண்பாட்டைத் தூண்டிவிட்டிருந்த புலிகள் தலைமை நாம் மகேஸ்வரன் மீது விமாசனங்களை முன்வைக்கும்வரை காத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து அவரைப் படுகொலை செய்தது. இது சகலரும் அறிந்த உண்மை. கருத்துக்குளைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் எமது ஜனநாயக வழிமுறைப்படி தற்பொழுதும் இந்த அடிப்படையிலே நான் இந்த உயரிய மன்றத்தில் கருத்துக்களுக்குப் பதிலாக கருத்துக்களை முன்வைக்கின்றேன். நாம் ஒருபோதும் கருத்துக்களுக்குப் பதிலாகக் கருவிகளாக எடுக்கவில்லை என்பதை நிரூபித்தே வந்திருக்கின்றோம் என்பதை இந்த உயரிய மன்றத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.புலிகளின் தலைமை எவ்வாறு திட்டமிட்டு படுகொலைகளைச் செய்யும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் நான் அவர்களது சகல படுகொலை முயற்சிகளிலிருந்தும் தப்பி வந்திருக்கின்றேன்.

அதேபோன்று சாவகச்சேரிப் பகுதியல் திருச்செல்வம் கபில்நாத் எனும் மாணவனின் படுகொலை குறித்து தற்பொழுது நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக ஜீவன் என்பவர் தேடப்பட்டு வருகின்றார். இந்த நிலையில் இந்தக் கொலை தொடர்பிலும் எமது கட்சி மீது கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் அபாண்டமான குற்றச்சாட்டினை இந்த பாராளுமன்றில் முன்வைத்தார்.அண்மையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற நடவடிக்கையின் போது  வடமாகாணத்திலும் சில நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்த இட்மாற்றத்தைக்கூட தவறான கற்பனைக் கதையாக உருவாக்கி அரசியல் தலையீடு காரணமாகத்தான் இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாக இவர் குற்றம்சாட்டியுள்ளார். இது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவமதிக்கும் செயலாகும் என்பதை நான் இங்கு பணிவுடன் சுட்டிக்காட்டுகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் என்மீதும் எனதுகட்சிமீதும் சுமத்தியுள்ள இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பா னவை எனக் கூறுவதுடன், இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அவரது கருத்துக்களை ஹன்சாட் அறிக்கையிலிருந்து நீக்கும்படி நான் தங்களிடம் தாழ்மையாகக் கேட்டுக்  கொள்கின்றேன். அதேநேரம் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் இந்தச் சபையில் கூறாத கருத்துக்கள் கூட இவரால் சபையில் கூறப்பட்டதாகத் தெரிவித்த தமிழ் பத்திரிகைகளிலும்  சில தனியார் தொலைக்காட்சிகளிலும் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து உரிய விசாரணைகளை கௌரவ சபாநாயகர் அவர்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும் இவரது இக்கருத்துக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவத்தை எனது இந்த உரைக்கும் வழங்க வேண்டுமென அவ்வூடக நிறுவனங்களுக்குத் தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

7 ஜூலை 2010

Related posts:

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்புக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன...