கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!  

Tuesday, August 9th, 2016

வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தை அண்டியுள்ள பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரினை தொடர்புபடுத்துவதன் ஊடாக மாங்குளம், வவுனிக்குளம், கொள்ளாவிலன்குளம், கல்விலன்குளம், மல்லாவிக்குளம் போன்ற பாரிய குளங்கள் பயனடையும். அத்துடன், இத்திட்டத்தின் மூலமாக மாங்குளம், மன்னாரின் ஒரு பகுதி, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மக்களினது குடி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், விவசாயம், கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கேற்ற மேய்ச்சல் தரை உருவாக்கம் என்பன மேலும் ஊக்குவிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் வளம் மேம்பாடடையும். எனவே இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் நாடாளுமன்றத்தில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், ஆரம்பத்தில் இத் திட்டமானது மகாவலித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. அதற்கமைய இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் வரையிலான காடழிப்பு இடம்பெறுவதால, அது எமது சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பை எற்படுத்தும் என்ற வகையில் இத் திட்டத்திற்கு மாற்றீடாக, பறங்கியாற்றிலிருந்து கால்வாய் அமைத்து பாலியாற்றுக்கு நீரைக் கொண்டு வருவதன் மூலம,; வடக்கு மாகாணத்தில் ஒரு கணிசமான பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்,  சிறந்த அபிவிருத்தியை அடைவதற்கும் முடியும் என்ற வகையிலும், இது சுற்றுச் சுழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற வகையிலுமே இத் திட்டத்தை முன்வைக்கின்றேன்.

கடந்த காலங்களில் இத் திட்டம் முன்மொழியப் பட்டிருப்பினும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது. ‘ஒரு துளி நீரேனும்

பயன்படுத்தப்படாமல், கடலை சென்றடைய விடக் கூடாது” என்ற பராக்கிரமபாகு மன்னனின் கூற்றிக்கு மாறாக, இந்த நீர்வளமானது பயன்பாடற்ற வகையில் மன்னார் கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு எமது மாவட்டங்களிலுள்ள நீர் வளங்கள் பயன்படுத்தப்படாமல் இன்றுவரை பெருமளவு நிலங்கள் தரிசு நிலங்களாகவே காணப்படுகின்றன. எனவே மேற்படித் திட்டம் தொடர்பில் உரிய அவதானமெடுத்து அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- ...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...