ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2019

கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய செயற்பாடுகளில் இருந்து தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்; நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவசரகாலச் சட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர், உதவிகள், ஒத்தாசைகள், ஒத்துழைப்புகள் வழங்கியோர் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இனிமேல், இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற வாய்ப்பில்லை என  ஒரு தரப்பினர் கூறுகின்ற நிலையில், அப்படிக் கூறுவது முட்டாள்த் தனம் என்றும், தாக்குதல் ஆபத்து இன்னும் முடிவுறவில்லை என்றும், தனிநபர் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றும் இன்னும் ஒரு தரப்பால் கூறப்பட்டும் வருகின்றது.

இத்தகைய முரண்பாட்டு ரீதியிலான கருத்துக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புப் தொடர்பில் உறுதியான விடயங்களை அறிவிப்பது யார்? என்பது தெரியாத ஒரு நிலையில் மக்கள் வாழுகின்ற அதேவேளை, எமது மக்களது வாழ்க்கை தொடர்பிலான தடைகள் பலவும் இந்த அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலகட்டத்திற்குள் அவசர, அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பரவலாக மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பிலான வலியத் திணிக்கப்படுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தக் காலகட்டத்திற்குள் மிகவும் அதிகரித்து விட்டுள்ளன.

கன்னியாவாகட்டும், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலாகட்டும், மலையகத்திலே மாடசாமி கோவிலாகட்டும், ஒட்டுசுட்டான் அலங்கார முருகன் கோவிலாகட்டும் இப்படி நிறையவே மத வழிபாட்டுத் தலங்கள் சார்ந்து பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியதைப்போல்” உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்க, வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் கடந்த 3 மாத காலமாகப் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பஸ்சின் கதவுகளைப் பூட்டி பயணிகளை உள்ளே இருக்க வைத்து சித்திரவதைகள் செய்து வருகின்றனர். வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில்தான் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு இருந்தததைப் போல், அவசரகாலச் சட்டமானது வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் மட்டுந்தான் நடைமுறைப் படுத்தப்படுவதுபோல், அந்தளவிற்கு அதிகமான கெடுபிடிகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அவசர காலச் சட்டத்தினை அமுல்படுத்துகின்றபோது அதனை மனிதாபிமான முகத்துடன் செயற்படுத்த வேண்டும் என எவ்வளவுதான் கோரிக்கை விடுத்தாலும், நாயின் வாலை நிமிர்த்த முடியாது’ என்பதுபோல், அது தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது தனது வழமை போன்ற செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக எமது அப்பாவி மக்களே நாளாந்தம் பல்வேறு இடையூறுகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

சாதாரண சட்டங்கள் செயற்பாட்டில் உள்ள நிலையில், பிரவேசிக்க இயலாத இலக்குகளுக்கு எல்லாம் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்றபோது பிரவேசிக்க இயலும் என்கின்ற நிலைமையே இன்று இந்த நாட்டில் நிலவி வருகின்றது.

இந்த பிரவேசமானது இன்று வெளிநாட்டு சக்திகளின் உள்நாட்டு விவகாரங்களுக்கான தலையீட்டு பிரவேசங்களாகவும் மாறிவிட்டுள்ளன என்றே கருதுவதற்கு நேரிட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வெலிசற கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த 24ஆம் திகதி சந்தித்துள்ளனர் என்ற தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்திருந்தது.

உண்மையில், இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? என்று கேள்வி கேட்கின்ற நிலையிலேயே மக்கள் இருந்து வருகின்றார்கள்

இதற்கு முன்னர் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி வரையில் போய் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் அரசாங்கத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் கேட்டபோது, தங்களுக்குத் தெரியாது என அவர்கள் கூறியிருந்தனர்.

இதனிடையே பெயர் தெரியாத விமானங்கள் இலங்கைக்கு வந்துபோவதாகக் கூறப்படுகின்றது. இவை தொடர்பில் யாருக்குத் தெரியும்? எனப் பொதுக் கேள்வி எழப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகைய செயற்பாடுகள் தொடர்வதைப் பார்க்கின்றபோது, கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணி தொடர்பிலான சந்தேகங்கள் எழுகின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனது அதிருப்தியை கார்தினல் அவர்கள் அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.

மேற்படி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என ஜனாதிபதி அவர்கள்கூட அண்மையில் தெரிவித்திருந்தார்.

இப்போது இத்தகைய அந்நிய தலையீடுகளைப் பார்க்கின்றபோது, வெவ்வேறு வகையிலான சந்தேகங்களையும் அவை கெண்டு தருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றே தோன்றுகின்றது.

அந்த வகையில், மேற்படி தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் உண்மை நிலை சார்ந்து விரைவுபடுத்த வேண்டியதும், மிக அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதைவிடுத்து, இதனை ஒரு பொழுது போக்கு அம்சமாக்கி, மக்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுவது தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சுதந்திரத்திற்குப் பின்னரான இந்த நாட்டில் பல்வேறு இன ரீதியிலான, மத ரீதியிலான, அரசியல் ரீதியிலான, உரிமை ரீதியிலான, பயங்கரவாத ரீதியிலான தாக்குதல்கள், மோதல்கள், கலவரங்கள் ஏற்பட்டும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டும், படிப்பினைகள் பெறப்பட்டும், அவற்றைப் படித்துப் பார்த்து, அவை மீள ஏற்படாத வகையில் தடுப்பதற்கு இயலாத நிலையிலேயே இந்த நாடு திரும்பத் திரும்ப இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

ஆளுந்தரப்புகள்தான் இப்படி எனில், ஆளுந்தரப்பைக் காப்பாற்றி வருகின்ற பணப் பெட்டி அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தரப்பு, அரசுக்கு ஒத்து ஊதிக்கொண்டே, எமது மக்களுக்கு சங்கு ஊதிக் கொண்டு இருக்கின்றது.

இன்று எமது மக்களது வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என்பன விடுவிக்கப்படாத நிலை தொடர்கின்ற அதேவேளை, தற்போது எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற, வாழ்வாதாரங்களை ஈட்டி வருகின்ற இடங்களும் மெது மெதுவாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வடக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்கள் பல ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி  வருகின்றன.

ஒரு புறத்தில் இத்தகைய திட்டமிட்ட குடியேற்றங்கள், மறுபுறத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் என எமது மக்களின் வாழ்க்கையை அடியோடு புதைக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை கொள்ளையிட்டுள்ள தரகு அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பு, அந்த வாக்குகளை இந்த அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் மீற்றர் வட்டிக்கு விட்டு, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எமது மக்களின் குடும்பங்கள் நுண்கடன் தொல்லைகளால் விவாகரத்து செய்கின்ற நிலையும், அதன் காரணமாக பிள்ளைகள் அனாதரவாக நிற்க வேண்டிய நிலையும் எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றது

இந்த அரசு ஆட்சிக்கு வந்திருந்தபோது எமது மக்கள் எப்படி இருந்தார்களோ, இன்று அதைவிட மேலும் பின்தங்கிய நிலைக்கே சென்றிருக்கிறார்கள். எமது மக்களது வாக்குகளை கொள்ளையடித்த தமிழ்த் தரப்புப் பணப் பெட்டி அரசியல்வாதிகள், எமது மக்களை விட்டும் வெகுதூரம் முன்னேறிவிட்டார்கள்.

இந்த நாட்டில் எதைக் கொண்டு வந்தாலும் முதலிலிருந்து கடைசி வரை பாதிக்கப்படுபவர்களாக எமது மக்களே இருக்கிறார்கள். இந்த அவசரகாலச் சட்டமும் அப்படித்தான் எமது மக்களைப் பொறுத்த வரையில் இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 10 வருடங்கள் கழிகின்ற நிலையில், மீண்டும் அதே யுத்தகாலக் கெடுபிடிகளை எமது மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது இன்றைய நாட்டின் நிலைமை.

இனியிங்கு வரப்போவது தேர்தல் காலம். அனல் கக்கும் அரசியல் பேச்சுகளுக்கு இங்கு பஞ்சமிருக்காது. தமிழ் வீரம் பேசிப்பேசி தமிழ் இனத்தையே சாகடித்தவர்கள் மறுபடியும் தமிழ் முழக்கமிடுவார்கள்,

தமது அரசியல் பலம் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர விடிவைப் பெற முடியாதவர்கள்.. மறுபடியும் வந்து தமிழரின் ஆணை கேட்டு முழங்குவார்கள்.

ஐந்து வருடங்கள் ஆட்சிக்கு ஒத்தூதி அரசைக் கவிழ விடாமல் தத்தமது சொந்த வாழ்வை மட்டும் வளப்படுத்தியவர்கள்,.. இனி ஆட்சியைக் கவிழ்ப்போம் எனக் கூறவும் தயங்க மாடார்கள். நாங்கள் அரசியல் பலமின்றியே சாதித்தவைகளில் ஒரு துளிகூடப் போதிய அரசியல் பலத்துடன் இருந்தும் சாதிக்க வக்கற்ற கூட்டம் ஆயிரம் முட்டையிட்ட ஆமையின் முன்னாள் ஒரு முட்டையிட்ட கோழி போல் இனியும் இவர்கள் கொக்கரிப்பார்கள்.

கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி… என்பது போல் இனியும்  இவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளையும்  காற்றோடுதான் பறக்க விடுவார்கள்.

போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள். வெடித்தெழுந்த போராட்டத்தில் உங்கள் வேட்டிகள் கூட கசங்கியதா என்று கேட்கிறேன். வெள்ளை வேட்டியும் வாத்தி வேலையும் என்று சொகுசாக இருந்த உங்கள் கைகளில் வெறும் விறகுக் கட்டைகளை மட்டுந்தானே தந்து கட்டாய ஆயுதப்பயிற்சி தந்தார்கள்.

அந்த விறகுக் கட்டைகளைக்கூட கண்டு அஞ்சி உங்களிடம் படிக்க வந்த மாணவர்களைப் போருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு ஓடித்தப்பி வந்தீர்கள். இந்த விசித்திரத்தில் கப்பல் போக்குவரத்தும் கடற்புலிகளும் என்று எதற்கு குறளி வித்தை காட்டுகிறீர்கள்?.. புலம்பெயர் தேசம் சென்றீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு இன்னும் ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டார்கள்.

அதற்கு நீங்கள் கூறிய பதில் என்ன என்று கேட்கிறேன். தமிழ் மக்கள் இன்னமும் அழிந்தது போதாது. இன்னும் எந்தளவு கூடுதல் அழிவுகள் நடக்கின்றதோ அந்தளவு விரைவாக விடுதலை கிடைக்கும் என்று கூறினீர்களா இல்லையா?..

புலிகள் இயக்கம் ஒரு கால கட்டத்தில் முன்னேறிச் சென்றபோது இலண்டனில் தங்கியிருந்த  உங்கள் தலைவர் ஒருவர் கேட்டார்… புலிகள் எல்லா இடங்களையும் பிடித்து விட்டால் நாங்கள் நின்று அரசியல் நடத்துவது எங்கே என்று கேட்டதை மறுக்கப்போகின்றீர்களா?..

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை யாருக்குப் பொருத்தம்?.. உங்களுக்கா?.. அல்லது வேறு யாருக்குமா?..

எனவே, எமது மக்கள் தொடர்பிலும் சற்றுச் சிந்திப்பதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் முன்வர வேண்டும். எமது மக்களுக்கு குரல் இல்லை என எவரும் நினைத்துவிடக் கூடாது. அரசுடன் இணைந்துள்ள தமிழ்த் தரப்பினருக்குப் பணம் முக்கியமாக இருக்கலாம். சலுகைகள் முக்கியமாக இருக்கலாம்.

ஆள நினைக்கும் தரப்பினருக்கு இந்தத் தமிழ்த் தரப்பினர் துணையாக இருக்கலாம். ஆனால், வாழ நினைக்கும் எமது மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது என்பதே எமது மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related posts:


அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர  தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்...
இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!