அரசுக்கு எதிரான போராட்டம் – ஈராக்கில் 319 பேர் பலி!
Tuesday, November 12th, 2019
ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் நேற்று நடந்த வன்முறையில் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 50 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஈராக் பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவார்கள். பாதுகாப்பு அதிகாரிகளும் வன்முறையில் இறந்துள்ளனர்.
Related posts:
|
|
|


