ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா?
Sunday, September 11th, 2016சவுதி அரேபியாவின் முன்னிலை மதகுரு, 35 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கமாட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்ற முஸ்லிம்களின் உச்சகட்ட புனிதப் பயணத்தை அடையாளப்படுத்துகின்ற போதனையானது தலைமை முப்தீயான அப்துல் அசிஸ் அல் ஷேக்கால் வழங்கப்படவுள்ளது.
உடல்நல குறைபாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது. ஈரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல’ என்று அவர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்தத் தகவல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவின் ஹஜ் பயண மேலாண்மையை ஈரானின் உயரிய மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தக் கூற்று வெளிப்பட்டது.
அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விவரங்களின்படி 464 ஈரானியர்கள் உள்பட 2,416 பேர் கொல்லப்பட்ட கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.
ஷேக் அல் ஷேக் தலைமை முப்தியாக 1999 – ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால், நாமிரா மசூதியிலிருந்து, அராஃபத் மலை வரை 1981- ஆம் ஆண்டிலிருந்து அவர் போதனை வழங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு பதிலாக ஷேக் சாலே பின் ஹமிட் இந்த போதனையை வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.ஆனால், அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
1,400 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவாக்கினர் முகமது நபி மேற்கொண்ட அதே பயணத்தை மேற்கொள்ள 15 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஷியா ஈரானியர்கள் இந்த ஆண்டு நடைபெறும் புனிதப் பயணத்தில் பங்குகொள்ளவில்லை.
இராஜீய ரீதியான மோதல்களால், சவுதி அரேபியாவும், ஈரானும் ஹஜ் ஏற்பாடுகள் குறித்து உடன்பாட்டை எட்ட மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சவுதி, ஹஜ் பயணிகளின் பாதுகாப்பிற்கு போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று ஈரான் தெரிவிக்கும் நிலையில், அந்நாடு நியாமற்ற கோரிக்கைகளை வைப்பதாக சவுதி குற்றஞ்சாட்டுகிறது. தூதரக உறவுகளை கொண்டிராத இந்த இரு நாடுகளும் ஏமன் மற்றும் சிரியாவில் நடைபெறும் மோதல்கள் உட்பட பிராந்திய பிரச்சனைகளில் கருத்து முரண்பட்டு காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|