விரைவில் இந்தியா மீது பொருளாதாரத் தடை? –  டிரம்ப் அறிவிப்பு!

Friday, October 12th, 2018

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து டிரயம்ப் ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷிய ராணுவத் தலையீடு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா குறுக்கீடு செய்ததான குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதன் மூலம் அந்நாட்டுடன் கச்சா எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு, ராணுவத் தளவாட வர்த்தகத்தை மேற்கொள்வதை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அந்த நாடுகள் மீதும் அமெரிக்கா தடை விதிக்கும் என்ற சூழல் இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்தார். அப்போது ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு டிரயம்ப் ரக ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்திய-ரஷிய ஒப்பந்தம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பொருளாதாரத் தடையில் இடம் பெறுமா? என்பதை இந்தியா விரைவில் தெரிந்து கொள்ளும். இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, தடை உண்டா? இல்லையா? என்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விரைவில் முடிவு எடுப்போம். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட விரைவிலேயே கூட முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் உடன் இருந்தார்.

Related posts: